இன்று சென்செக்ஸ் இண்டெக்ஸ் வர்த்தக நேர முடிவில் 1,114 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 36,553 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
இத்தனை பெரிய வீழ்ச்சியின் போது, எப்படியும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வாங்கி வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பும் சரிந்து இருக்கும். அதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
முதலில் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக எந்த புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது எனப் பார்ப்போம். அதன் பின், கடந்த சில நாட்களில் சரிந்து வரும் சென்செக்ஸால், முதலீட்டாளர்கள், எவ்வளவு சந்தை மதிப்பை இழந்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
6 நாட்களில் 2,749 புள்ளிகள் வீழ்ச்சி
- 16 செப்டம்பர் 2020 39,302
- 17 செப்டம்பர் 2020 38,979
- 18 செப்டம்பர் 2020 38,845
- 21 செப்டம்பர் 2020 38,034
- 22 செப்டம்பர் 2020 37,734
- 23 செப்டம்பர் 2020 37,668
- 24 செப்டம்பர் 2020 36,553... என தொடர்ந்துசரிந்து கொண்டே வருகிறது. இந்த ஆறு வர்த்தக நாட்களில் மட்டும் (39302 - 36553) சென்செக்ஸ் 2,749 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
சந்தை மதிப்பு
கடந்த 16 செப்டம்பர் 2020 அன்று வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 160.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இன்று (24 செப் 2020) வர்த்தக நேரம் நிறைவடைந்த பின், அதே மும்பை பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 148.76 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டு இருக்கிறது. ஆக இந்த 6 வர்த்தக நாட்களில் 11.32 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
சென்செக்ஸ் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன
1. உலக பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி
2. அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை
3. இந்திய வங்கித் துறை தொடர்பாக FinCEN அமைப்பு வெளியிட்ட விவரங்கள்
4. பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை
5. செப்டம்பர் மாதத்துக்கான ஃப்யூச்சர் காண்டிராக்டுகள் காலாவதி ஆனது... போன்ற பல காரணங்களால் இன்று சென்செக்ஸ் ஒரு பெரிய வீழ்ச்சியைக் கண்டு இருக்கிறது.
மும்பை பங்குச் சந்தை நிலவரம் என்ன?
சென்செக்ஸின் 30 பங்குகளில் ஒரே ஒரு பங்கு மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமானது. மீதமுள்ள 29 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,812 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 583 பங்குகள் ஏற்றத்திலும், 2,064 பங்குகள் விலை இறக்கத்திலும், 165 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 89 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.