பொதுவாகவே பங்கு சந்தையில் பொது பங்கு வெளியீடு என்றாலே அது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம். குறிப்பாக சிறு முதலீட்டாளர்களுக்கும், புதியதாக பங்கு சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கும் மிக நல்ல வாய்ப்பு.
ஏனெனில் பங்கு சந்தையில் புதியதாக காலடி எடுத்து வைக்கும் ஒரு நிறுவனம், முதலீட்டாளர்களை கவர விலை குறைவாக நிர்ணயிக்கும். அதோடு நிறுவனம் வளர வளர அதன் பங்கு விலையும் நிச்சயம் அதிகரிக்கும். அப்படி இருக்கும்போது குறைந்த விலையில் வாங்க ஐபிஓ நல்ல வாய்ப்பு எனலாம்.
அந்த வகையில் நாம் பார்க்கவிருகப்பது பேடிஎம் மற்றும் பாலிசி பஜார் நிறுவனங்களின் ஐபிஓ பற்றித் தான்.
பேடிஎம் ஐபிஓ
பேடிஎம் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடானது நடப்பு ஆண்டில் செய்யப்படும் மிகப்பெரிய பங்கு வெளியீடுகளில் ஒன்று. இந்த ஐபிஓ மூலம் இந்த நிறுவனம் 18,300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது. இது முன்னதாக 16,600 கோடி ரூபாயாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடானது நவம்பர் 8 அன்று வெளியிடப்படவுள்ளது.
பேடிஎம் ஐபிஓ விலை
இந்த பங்கு வெளியீட்டில் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் புதிய வெளியீடாகவும், 10,000 கோடி ரூபாய் அதன் புரோமோட்டார்கள் மற்றும் பங்குதாரர்களிடம் இருந்து விற்பனை செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த ஐபிஓவிற்கான விலை 2,080 - 2,150 ரூபாயயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எப்போது முடிவு?
கடந்த 2010ம் ஆண்டில் கோல் இந்தியா நிறுவனம் 15,475 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கினை வெளியிட்ட நிலையில், அதன் பிறகு தற்போது பேடிஎம் தான், அதிகளவில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நவம்பர் 8 அன்று ஐபிஓ தொடங்கவுள்ள நிலையில், நவம்பர் 10 அன்று முடிவடையவுள்ளது
பாலிசி பஜார் ஐபிஓ
பாலிசி பஜாஜ் நிறுவனம் அதன் பொது பங்கு வெளியீட்டினை நவம்பர் 1 அன்று தொடங்கவுள்ளது. இதன் விலை நிர்ணயம் 940 - 980 ரூபாயாகும். இதன் முகமதிப்பு 2 ரூபாயாகும். இந்த வெளியீடானது நவம்பர் 3 அன்று முடிவடையவுள்ளது. நவம்பர் 10 அன்று யாருக்கு எவ்வளவு என்று ஒதுக்கீடு செய்யப்படும்.
பாலிசி பஜார் ஐபிஓ மதிப்பு
இந்த பங்கு வெளியீட்டின் மதிப்பானது 5,700 ரூபாயாகும். இதில் புதிய பங்கு வெளியீடாக 3,750 கோடி ரூபாயும், பங்குதாரர்கள் மற்றும் புரோமோட்டார்களிடம் இருக்கும் 1,960 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளும் விற்பனை செய்யப்படும். பெரும் அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த நிறுவனம், இன்சூரன்ஸ் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தையும் இத்துறையில் கொண்டுள்ளது.