கடந்த சில தினங்களாகவே இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றது. பல நிறுவன பங்குகளும் பட்டையை கிளப்பி வருகின்றன. பங்கு சந்தை பற்றி தெரியாதவர்கள் கூட, பலரும் என்ன காரணம் சந்தை இந்த அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளதே என கமாண்ட் செய்யும் அளவுக்கு மக்கள் மத்தியில் பதிந்துள்ளது.
அந்தளவுக்கு அனுதினமும் புதிய உச்சத்தினை உடைத்து, அடுத்தடுத்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன.
இதற்கிடையில் பங்கு சந்தையில் நல்ல ஏற்றத்தினை கண்டு வரும், பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான பிடித்தமான ஒரு பங்கினை பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.
போட்டி கிடையாது?
அதிலும் பங்கு சந்தைக்கு வரும் முன்பே இந்த பங்கு பலத்த எதிர்பார்ப்பினை உருவாக்கியது எனலாம். ஏனெனில் வளர்ந்து வரும் இந்த நிறுவனத்திற்கு போட்டி என்பது அதிகம் கிடையாது. அதோடு பல வணிகத்திலும் கொடி கட்டி பறந்து வருகின்றது. இப்படி பல தகுதிகள் உள்ளது. இது பங்குதாரர்களை கவர போதாதா என்ன?
முதலீட்டாளர்களின் ஆர்வம்
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் நிறுவனம், இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி தான். இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீட்டின்போது முதலீட்டாளர்கள் மிக ஆர்வமாக வாங்கி வைத்தனர் எனலாம். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், 2.01 கோடி பங்குகளுக்கு எதிராக, 225.09 கோடி விண்ணப்பங்கள் வந்தது தான். அந்தளவுக்கு சில்லறை முதலீட்டாளர்கள் இந்த பங்கினை வாங்க ஆர்வம் காட்டினர்.
பிரீமியத்தில் பங்கு விலை
ஐஆர்சிடிசி லிமிடெட் நிறுவனம் பங்கு சந்தைகளில், அக்டோபர் 14, 2019 அன்று பட்டியிலிடப்பட்டது. பட்டியிலிடப்பட்டதிலிருந்தே அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த பங்கின் விலையானது ஏற்றம் கண்டு வருகின்றது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக ஐபிஒவில் இந்த பங்கானது 320 என்ற விலைக்கு விற்கப்பட்ட நிலையில், பங்கு சந்தையில் 644 ரூபாய்க்கு பட்டியிடப்பட்டது. அப்போதே இந்த நிறுவனம் 101.25% பிரீமியத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய NSE நிலவரம் என்ன?
அப்படிப்பட்ட ஒரு பங்கின் இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? இன்று வர்த்தக முடிவில் NSEயில் ஐஆர்சிடிசி-யின் பங்கு விலையானது கிட்டதட்ட 5% அல்லது 138.50 ரூபாய் அதிகரித்து, 3,008.40 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 3040 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 2,879.15 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலையும் 3040 ரூபாயாகும்.
BSE-யில் நிலவரம் என்ன?
BSE-யில் ஐஆர்சிடிசி-யின் பங்கு விலையானது கிட்டதட்ட 5% அதிகரித்து அல்லது 140.10 ரூபாய் அதிகரித்து, 3,009.50 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 3041.20 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 2,874.90 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலையும் 3041.20 ரூபாயாகும்.
நடப்பு ஆண்டில் ஏற்றம்
செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரையில் இந்த பங்கின் விலையானது 10.38% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 1.3% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நடப்பு ஆண்டில் 100% மேலாக அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
இதுவும் ஒரு காராணம்
கொரோனாவிற்கு பிறகு பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், போக்குவரத்து துறையும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதற்கிடையில் தான் தற்போது மீண்டும் கணிசமான வளர்ச்சியினை எட்டத் தொடங்கியுள்ளது. சமீப காலமாக 2500 - 2750 என்ற லெவலில் வர்த்தகமாகி வந்த நிலையில், அடுத்து 3,000 ரூபாயினை தாண்டலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தேவை அதிகரிக்கலாம்
தற்போது கொரோனாவுக்கு பிறகு வரவிருக்கும் விழாக்கால பருவத்தில், தேவை என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் தற்போது தான் நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், பலரும் தங்களது சொந்த ஊர், சொந்த நாட்டிலிருந்து, தங்களது பணி நிமித்தமாக திரும்ப தொடங்கியுள்ளனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக விழாக்கால பருவத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாபம் கொடுக்கலாம்
டெக்னிக்கலாகவும் இந்த பங்கின் விலையானது இன்னும் அதிகரிக்கும் விதமாகவே இருக்கும் நிலையில், நிபுணர்களும் இந்த பங்கு விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என்றே சுட்டிக் காட்டுகின்றனர். மொத்தத்தில் இதுவரையில் லாபத்தில் இருப்பது மட்டும் அல்ல, இனியும் லாபம் கிடைக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.