கடந்த செப்டம்பர் 30, 2019 முதல் அக்டோபர் 03, 2019 வரையான காலத்தில் IRCTC நிறுவனம் 645 கோடி ரூபாயைத் திரட்ட தன் 12.5 சதவிகித பங்குகளை வெளியிட்டது. இந்த 12.5 சதவிகித பங்குகளை எண்ணிக்கையில் பார்த்தால் சுமார் 20.1 மில்லியன் பங்குகள். இந்த பங்குகளுக்கான விலையாக 315 - 320 ரூபாய் நிர்ணயித்தது. பல அனலிஸ்டுகள் இந்த நிறுவனம் ஈட்டும் லாபம், மற்றும் மொனாபொலி என்று சொல்லப்படுகிற, தான் மட்டுமே அந்த தொழிலைச் செய்யும் சாதகம் எல்லாவற்றையும் பார்த்து, இந்த நிறுவன பங்குகளை வாங்கச் சொன்னார்கள்.
சாதாரண சில்லறை முதலீட்டாளர்கள் தொடங்கி, பெரிய பெரிய நிறுவனங்கள் வரை பங்கை சகட்டு மேனிக்கு வாங்கிப் போட்டார்கள். எந்த அளவுக்கு வாங்கினார்கள் என்றால் 111 மடங்கு அதிகமாக வாங்கினார்கள். அதாவது 2.01 கோடி பங்குக்கு 225.09 கோடி விண்ணப்பங்கள் வந்தன. இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் 1 பங்குக்கு 111 பேர் விண்ணப்பித்தார்கள். இதை எல்லாம் தாண்டி லாட்டரி அடிப்படையில் பங்குகளும், முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 14 அக்டோபர் 2019 அன்று இந்திய பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டது.
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பங்கு விலை சுமார் 725 ரூபாய்க்கு மேல் பட்டியலிடப்பட்டது. அதாவது 320 ரூபாய்க்கு பங்குகளை வாங்கியவர்கள், பட்டியலிடும் போதே சுமார் 125 சதவிகிதம் லாபம். அதோடு நின்றால் கூட பரவாயில்லை. ஆனால் சந்தை மேற்கொண்டு ஏற்றம் கண்டு கொண்டே தான் இருக்கிறது.
இன்று, இதே IRCTC நிறுவன பங்குகளின் விலை 909 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. ஆக 320 ரூபாய்க்கு வாங்கிய பங்குகளின் விலை சுமார் 184 சதவிகிதம் ஏற்றம் கண்டு 909 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த விலையில் இந்த பன்ங்கை விற்றால் 184 சதவிகித லாபத்தை அள்ளி விடலாம். போகிற போக்கைப் பார்த்தால் அடுத்த சில வர்த்தக நாட்களில் இந்த IRCTC பங்குகள் முழுமையாக 300 சதவிகிதம் லாபம் கொடுக்கும் போலத் தோன்றுகிறது. அப்படி இந்த பங்குகள் 300 % விலை அதிகரிக்க வேண்டும் என்றால் 960 ரூபாயைத் தொட வேண்டும். தொட்டு விடுமோ..? இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்..? நம் நேரமோ கிரகமோ, நம்மால் மட்டும் இது போல நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய முடியவில்லை.