இந்திய ரயில்வே துறையின் டிக்கெட் புக்கிங் சேவை நிறுவனமான IRCTC நிறுவனத்தின் ஒரு பங்கு 5 பங்குகளாக உடைகிறது. இதன் மூலம் 100 பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு 500 பங்குகள் கிடைக்கும்.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள IRCTC நிறுவனத்தின் பங்குகள் 10 ரூபாய் முகமதிப்புக் கொண்டதாக உள்ளது. இந்நிலையில் ஒரு பங்கு 5 ஆக உடைக்கப்பட்டு 2 ரூபாய் முகமதிப்புக் கொண்ட பங்குகளாக உடைக்கப்படுகிறது.
இந்த ஸ்டாக் ஸ்பிலிட்-க்கா ரயில்வே துறை அமைச்சகமும், பங்குதாரர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
IRCTC நிறுவன பங்குகள்
IRCTC நிறுவன பங்குகள் ஐபிஓ வெளியிட்டு இதுநாள் வரையில் சுமார் 734 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆம் வெறும் 320 ரூபாய் விலையில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகள் 2,663.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
IRCTC நிறுவனம்
IRCTC நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது ஸ்டாக் ஸ்பிலிட் திட்டத்தை அறிவித்தது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் IRCTC நிறுவனம் சுமார் 24 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்த நிலையில், நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 82 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றது.
IRCTC லாபம் வருவாய்
IRCTC நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் மூலம் கிடைத்த வருமானத்தின் அளவு 85 சதவீதம் அதிகரித்து 243 கோடி ரூபாய்ப் பெற்றது, கடந்த நிதியாண்டில் இதன் அளவு 131 கோடி ரூபாய் அளவில் மட்டுமே இருந்தது.
IRCTC ஸ்டாக் ஸ்பிலிட்
IRCTC நிறுவனம் பொதுத்துறை நிறுவனத்திற்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு பங்குகளை உடைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ரயில்வே துறை அமைக்கத்தின் ஒப்புதல் அடிப்படையில் பங்குகளை உடைக்கப்பட்டால் முதலீட்டுச் சந்தையில் புழக்கம் அதிகரிக்கும். இதுமட்டும் அல்லாமல் சிறு முதலீட்டாளர்கள் எளிதாக முதலீடு செய்யும் வாய்ப்பும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு எண்ணிக்கை 5 மடங்கு உயர்வு
இந்தப் பங்கு உடைப்பு மூலம் சந்தையில் இருக்கும் 25,00,00,000 பங்குகள் எண்ணிக்கை 125,00,00,000 பங்குகளாக உயரும். இதன் படி 10 ரூபாய் முகமதிப்புக் கொண்ட பங்குகள் 2 ரூபாயாக உடைய உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் IRCTC நிறுவனப் பங்குகள் 84 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?
இந்தப் பங்குகளை வாங்குவதா..? என்ற கேள்விக்குப் பதில் இதுதான். இந்திய ரயில்வே மற்றும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே தீரும். அந்த வகையில் இந்திய ரயில்வே துறையின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை மற்றும் இதர சேவைகளை அளிக்கும் ஓரே தளம் IRCTC நிறுவனம் மட்டுமே.
லாபம் கிடைக்கும்
ரயில்வே துறையின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை துறையில் மோனோபோலியாக IRCTC நிறுவனம் ஆதிக்கம் செய்கிறது. இதனால் பங்கு விலை குறைவாக இருக்கும் போது முதலீடு செய்தால் கட்டாயம் லாபம் கிடைக்கும்.