டெல்லி: இந்தியாவின் இன்சூரன்ஸ் ஜாம்பவான் ஆன லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (LIC), இந்தியாவின் எண்ணெய் ஜாம்பவான் ஆன பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (BPCL) நிறுவனத்தின் 2% பங்குகளை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து வாங்கியுள்ளது.
எல்ஐசியின் வசம் பிபிசிஎல்-லின் பங்கு விகிதமானது 15,25,08,269 -ல் இருந்து 19,61,15,164 ஈக்விட்டி பங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 7.030% என்ற அளவில் இருந்து 9.047% ஆக அதிகரித்துள்ளதாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹோல்டிங் அதிகரிப்பு
பிபிசிஎல்- லின் சந்தை மதிப்பானது 67,301 கோடி ரூபாயாக உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளர் என்பதோடு, சிறந்த சில்லறை விற்பனையாளராகவும் இருந்து வருகின்றது. கடந்த டிசம்பர் 28, 2021 காலகட்டத்தில் இருந்து, செப்டம்பர் 26, 2022 நிலவரப்படி 2% மேலாக பங்குகளை எல்ஐசி தன் வசம் வைத்துள்ளது.
பரிமாற்றத்தின் மதிப்பு
எல்ஐசி-யின் இந்த பரிமாற்றத்தின் மதிப்பு கிட்டதட்ட 1598 கோடி ரூபாயாகும். எல்ஐசி இந்த பங்குகளை ஓபன் மார்கெட் மூலம் 336.43 ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்ஐசியின் பங்கு விலை கடந்த அமர்வில் 629 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது. இதே பிபிசிஎல் பங்கு விலையானது 310.65 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது.
பங்கு சந்தையில் தாக்கம்
எல்ஐசி - பிபிசிஎல் இவ்விரு நிறுவனங்களின் இந்த முதலீட்டு பரிமாற்றமானது, இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையலாம். இதற்கிடையில் இதன் எதிரொலி இன்று இந்திய சந்தையிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஐசி பங்கு விலை
சமீபத்தில் தான் பங்கு சந்தையில் நுழைந்த எல்ஐசி தொடர்ந்து இன்சூரன்ஸ் நிறுவனமாக மட்டும் அல்லாது, பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும் முதலீட்டினை செய்து வரும் மிகப்பெரிய முதலீட்டாளராகவும் உள்ளது. இது இந்திய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிகரமாகவும் இருக்கும் என்பதோடு, எல்ஐசி-யும் பங்கின் மூலம் லாபம் ஈட்ட முடியும். இது எல்ஐசியின் வளர்ச்சிக்கும் துணை புரியலாம் என்பதோடு, அதன் பங்கு விலையிலும் எதிரொலிக்கலாம்.