எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளது. இதை பொது பங்கு வெளியீடு மூலமாக விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
எல்ஐசி ஒரு நல்ல லாபம் ஈட்டும் நிறுவனமாக இருக்கும் போது, அதை ஏன் பொது பங்கு வெளியீட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.
தொடர்ந்து அரசாங்கத்தின் முதலீடுகளில் கணிசமான அளவு எல்ஐசி வழங்கி வருகின்றது. அப்படி இருக்கையில் எதற்காக இந்த பங்கு விற்பனை என்று ஆரம்பத்தில் பலவாறு எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த ஆண்டு இல்லை
அரசாங்கத்திற்கு நிதி தேவைப்படும் போதெல்லாம் எல்ஐசியைத் தேடி செல்கிறது. அதிலும் உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூகத்துறை மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றிற்கும் நிதி வழங்கி வருகிறோம் என்றெல்லாம் எல்ஐசி ஊழியர் சங்கங்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையில் கொரோனா பரவலுக்கு மத்தியில், எல்ஐசி-யின் பங்கு விற்பனை இந்த ஆண்டு இல்லை. இது அடுத்த ஆண்டில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஐபிஓ எப்போது?
இதற்கிடையில் இன்று வெளியான தகவல் படி, நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் எல் ஐ சி பொதுப் பங்கு வெளியீடு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டின் ஜனவரி - மார்ச் 2022 காலாண்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
DIPAM அறிக்கை
அதோடு இந்த பங்கு வெளியீட்டிற்கான பரிவர்த்தனைகளை நிர்வகிக்க , விரைவில் வணிக வங்கியாளர்கள் நிர்வகிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. DIPAM அமைப்பின் செயலாளர் துஹின் காந்தா பாண்டே, எல் ஐ சி பொதுப் பங்கு வெளியீடு நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு வெளியீடு எவ்வளவு?
இந்த பங்கு வெளியீட்டிற்காக நாங்கள் பல தரப்பில் இருந்தும் முன்னேறி வருகின்றோம். பங்கு விற்பனையின் இறுதி அளவினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்வார் என பாண்டே கூறியுள்ளார். பங்கு சந்தையில் பட்டியலிட விரைவில் செபியிடம் தாக்கல் செய்யப்படும்.
நிபுணர்கள் எதிர்பார்ப்பு
பங்கு வெளியீட்டுக்கு ஏதுவாக தேவையான ஆவணங்களை பங்கு சந்தை கட்டுப்பாட்டாளரான செபியுடன் கலந்துரையாடி செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் இந்த பங்கு வெளியீட்டிற்கான மதிப்பீடு 90,000 - 1 லட்சம் கோடி ரூபாய் வரையில் இருக்கலாம் என மதிப்பீடுகள் வெளியாகி வருகின்றன.
விரைவில் எதிர்பார்க்கலாம்
அரசின் நிதி நெருக்கடியான நிலையில், எல்ஐசி-யின் பங்கு விற்பனை என்பது அரசின் 7.75 லட்சம் கோடி இலக்கினை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆக இந்த பங்கு வெளியீடு விரைவில் எதிர்பார்க்கலாம். ஏனெனில் எல்ஐசி பொது பங்கு வெளியீட்டுக்கான பணிகளை அரசு மும்முரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இதற்கான திருத்தம் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.