இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) காப்பீட்டுத் துறையில் மட்டும் அல்லாமல் முதலீட்டு சந்தையிலும் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எல்ஐசி நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் வரும் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியை முறையாக திட்டமிட்டு பங்குச்சந்தையிலும், அரசு பத்திரத்திலும், பல்வேறு நிதி சேவையிலும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளராக விளங்கம் எல்ஐசி, எந்த ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தாலும் சரி, பங்குகளை விற்பனை செய்தாலும் சரி முதலீட்டாளர்கள் மத்தியில் எப்போதும் பெரும் விவாத பொருளாகவே இருக்கும்.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், எல்ஐசி ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனத்தில் (PSU) கணிசமான பங்குகளை விற்பனை செய்துள்ளது, பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, என்எம்டிசி லிமிடெட் நிறுவனத்தில் எல்ஐசி 5.91 கோடி பங்குகளை விற்றுள்ளது. இது பொதுத்துறை நிறுவனத்தில் 2 சதவீத பங்கைக் குறிக்கிறது. இந்த என்எம்டிசி பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு தற்போது ரூ.250 க்கும் குறைவான விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இந்த 2 சதவீத பங்கு விற்பனையைத் தொடர்ந்து, என்எம்டிசி லிமிடெட்டில் எல்ஐசியின் பங்கு இருப்பு தற்போது 16.40 கோடி பங்குகளாக உள்ளன. இது நிறுவனத்தில் 5.59 சதவீத உரிமைப் பங்கைக் குறிக்கிறது.
எல்ஐசி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்திய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்எம்டிசி லிமிடெட்டின் ஈக்விட்டி பங்குகளில் தனது பங்குகளை 22,31,79,825 லிருந்து 16,40,59,791 ஆகக் குறைத்துள்ளது. இது நிறுவனத்தின் செலுத்தப்பட்ட மூலதனத்தில் 7.615% லிருந்து 5.598% ஆகக் குறைந்துள்ளது" என்று கூறியுள்ளது. இது என்எம்டிசியில் எல்ஐசியின் பங்குகளில் குறைப்பை உறுதிப்படுத்துகிறது.
இந்த விற்பனைக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சந்தை நிலவரம், முதலீட்டு உத்திகள் மற்றும் லாபம் ஈட்டும் நோக்கம் போன்ற காரணங்களால் எல்ஐசி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த விற்பனை என்எம்டிசியின் பங்கு விலையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எல்ஐசியின் இந்த நடவடிக்கை பங்குச் சந்தையில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மற்றும் முதலீட்டு உத்திகள் குறித்து விவாதங்களை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications