பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபம் காண வேண்டும் என்ற நோக்கத்தில் தான், பங்கு சந்தையில் முதலீடு செய்வார்கள். ஆனால் தொடர்ந்து சந்தையில் லாபம் பெறுவது மிகச் சிலரே.
ஆர்வமிகுதியால் ஏராளமான பணத்தை ஒரே பங்கில் போடாமல், முதலீடுகளை பரவலாக பிரித்து முதலீடு செய்யலாம்.
எனினும் ஒரு நல்ல தரமான பங்கில் முதலீடு செய்து நீண்ட காலம் காத்திருப்பது, நல்ல லாபத்திற்கு சரியான ஆரம்பம் என்றே கூறலாம். அந்தவகையில் நாம் இன்று பார்க்க இருப்பது அஸ்ட்ரல் நிறுவனத்தின் பங்கினை பற்றி தான்.
வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்
கடந்த வாரத்தில் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவு 60 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. இதற்கிடையில் பல நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 8 மாதங்களில் சென்செக்ஸ் கிட்டதட்ட 10,000 புள்ளிகளை எட்டியுள்ளது. ஜனவரி 21, 2021 அன்று சென்செக்ஸ் 50,000 புள்ளிகளை தொட்டது.
மிகப்பெரிய அளவில் லாபம்
கடந்த 8 மாதங்களில் 42 பங்குகள் முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக மாற்றியுள்ளது. இந்த பங்குகள் 100% வருவாயினை கொடுத்துள்ளது. இதே சில பங்குகள் நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, எதிர்பாராத அளவு பலத்த லாபத்தினை கொடுத்துள்ளது. அந்தளவுக்கு மிகப்பெரிய அளவில் லாபத்தினை கொடுத்துள்ள பங்குகளில் அஸ்ட்ரல் பங்கும் ஒன்று.
வலுவான வருவாய்
கடந்த 10 ஆண்டுகால வரலாற்றினை பார்த்தால் இந்த பங்கின் விலையானது நினைத்து பார்க்கமுடியாத அளவு ஏற்றத்தினை கண்டுள்ளது. இது 8,500% மேலாக வருவாயினை கொடுத்துள்ளது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு 23.82 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 2,100 ரூபாய்க்கு மேலாக காணப்படுகின்றது.
எவ்வளவு ஏற்றம்
கடந்த மாதத்தில் இந்த பங்கின் விலையானது 1982.05 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 2,100 ரூபாய்க்கு மேலாக காணப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் இந்த பங்கின் விலையானது 4% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 6 மாதத்தில் இந்த பங்கின் விலையானது 1591.65 ரூபாயில் இருந்து, 2100 ரூபாய்க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது சுமார் 30% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்களுக்கு லட்சாதிபதி வாய்ப்பு
இதே கடந்த 5 ஆண்டுகளில் இந்த பங்கின் விலையானது 263.73 ரூபாயில் இருந்து, 2,100 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 700% மேலாக அதிகரித்துள்ளது. இது 80 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த பங்கிற்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 2.40 லட்சம் ரூபாயாகும். இதே 5 வருடத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் 7.80 லட்சம் ரூபாயாகும். இதே 10 வருடத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், 24 ரூபாய்க்கு ஒரு பங்கினை வாங்கியிருந்தால் கூட, இன்று அதன் மதிப்பு 86 லட்சம் ரூபாயாகும்.
பங்கு விலை இலக்கு
இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மீடியர் டெர்மில் இதன் பங்கு விலையானது 2.,250 ரூபாய் முதல் 2,300 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதே நேரம் ஸ்டாப்லாஸ் 1,950 ரூபாயாக வைத்துக் கொள்ளவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
*** இதனை தரகு நிறுவனங்கள் வாங்கலாம் என பரிந்துரை செய்தாலும், இது வாங்க சரியான இடம் தானா? வாங்கலாமா? வேண்டாமா? என்பதை அலாசி ஆராய்ந்து இறுதி முடிவினை நீங்கள் எடுக்க வேண்டும்.