இந்திய பங்குச்சந்தை அடுத்தடுத்து பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வரும் காரணத்தால், முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு லாபத்தை மொத்தமாக இழந்து ஜீரோவில் நிற்கின்றனர். இந்த பங்குச்சந்தையில் முக்கிய பென்ச்மார்க் ஆக இருக்கும்
நிஃப்டி 50 குறியீடு பெரிய அளவில் முன்னேறவும் இல்லை, பின்னோக்கியும் செல்லவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
இந்த ஒரு காரணத்தால் கடந்த 2 வருடத்தில் புதிதாக முதலீடு செய்தவர்கள் மிகவும் குறைந்த லாபத்தையோ அல்லது சிறிய அளவிலான நஷ்டத்தையோ சந்தித்து வருகின்றனர்.

2024ஆம் ஆண்டு செப்டம்பரில் 26277 புள்ளிகளை எட்டிய நிஃப்டி, பின்னர் டிரம்ப்-ன் வரி விதிப்பு அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் முதலீட்டு சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு மூலம் இந்திய சந்தையை பெரிய அளவில் சரிய வழிவகுத்தது. இதை தொடர்ந்து ஜனவரி 2026-இல் மீண்டும் 26,373 புள்ளிகள் வரை ராக்கெட் வேகத்தில் மீண்டு எழுந்தாலும், அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதன் மூலம் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் மதிப்பு உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக தற்போது 24,000 அருகில் வர்த்தகமாகி வருகிறது.
இதனால் இந்திய பங்குச்சந்தையில் பணத்தை போட்ட முதலீட்டாளர்கள் கடந்த இரண்டு வருடத்தில் மந்தமான அல்லது சிறிய அளவிலான லாபத்தை மட்டுமே பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இக்காலக்கட்டத்தில் பலர் நஷ்டத்தை கூட அடைந்திருக்கலாம். பங்குச்சந்தையில் நுழையும் போது வருடம் 14-16 சதவீத லாபம் என ஆசையில் நுழைந்திருந்தாலும் இந்த 2 வருடம் முதலீட்டு வாழ்க்கை பெரிய பாடமாக அமைந்திருக்கும்.
நிஃப்டி 50 குறியீடு ஜூன் 2024 இறுதியில் இருந்த அளவிற்கே தற்போது திரும்பியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 50 குறியீடு 109 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
உண்மையில், இதே போன்று நிஃப்டி இரண்டு வருடங்களுக்கு மேல் மந்தநிலையில் இருந்த காலகட்டங்கள் இதற்கு முன்பும் இருந்துள்ளது. இதேபோல் இத்தகைய மந்த நிலைக்கு பின்பு சந்தை எப்போதும் சிறப்பான உயர்வை பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
உதரணமாக 2001 முதல் இதுவரை இதேபோல் 11 முறை நிஃப்டி மந்த நிலையில் இருந்து ஒரு வருடத்தில் சந்தை 5% முதல் 50% வரை உயர்ந்துள்ளது என எடல்வெய்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் முதலீட்டாளர்கள் இந்த சரிவை கண்டு அஞ்ச வேண்டாம், இதற்கு மாற்றாக நீங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் நிதி நிலை, வர்த்தக அளவுகளை தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்யுங்கள்.
ஜூன் 2001 முதல் ஜூன் 2003 வரை நிஃப்டி தேக்கத்தில் இருந்த பிறகு, அடுத்த ஒரு வருடத்தில் 33% உயர்வும், அடுத்த மூன்று வருடங்களில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 40% வருமானமும் முதலீட்டாளர்களுக்கு கிடைத்தது. அதேபோல், ஜூலை 2018 முதல் ஜூலை 2020 வரையிலான தேக்க காலத்திற்குப் பிறகு, அடுத்த ஒரு வருடத்தில் நிஃப்டி 42% உயர்ந்தது.
கொரோனா காலத்தில் (ஆகஸ்ட் 2018 - ஆகஸ்ட் 2020) ஏற்பட்ட மந்த நிலைக்கு பிறகு, அடுத்த 12 மாதங்களில் நிஃப்டி குறியீடு 50% வரை உயர்ந்தது. இந்த வரலாற்று தரவுகளின்படி, இரண்டு வருட தேக்கத்திற்குப் பிறகும் சந்தை மீண்டும் நீண்டகால தேக்கத்தில் சிக்கிய சம்பவம் இதுவரை நடைபெறவில்லை என்பது ஒரு நல்ல சிக்னல்.
தற்போதைய பங்குச்சந்தை நிலவரம் முதலீட்டாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், வரலாற்று தரவுகளை பார்க்கும் போது இரண்டு வருடங்களாக சந்தை மந்தநிலையில் நீடித்த பிறகு, பெரும்பாலான சமயங்களில் அடுத்த ஒரு வருடத்தில் நல்ல உயர்வு பதிவாகியுள்ளது. எனவே உங்களுடைய முதலீட்டை மறுஆய்வு செய்து தொடர்ந்து முதலீடு செய்தால் உங்களுக்கான காம்போடிங் வருமானம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications