பொதுவாக பங்கு வெளியீடு (IPO) என்றாலே, சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு என்பார்கள். ஏனெனில் நல்ல லாபகரமான மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகளை கூட, குறைந்த விலையில் வாங்க முடியும். ஆக ஒரு நிறுவனத்தின் பங்கினை குறைந்த விலையில் வாங்க, இந்த ஐபிஓ ஒரு சிறந்த ஆப்சன் என்பார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் இரண்டு நிறுவனங்களின் பங்கு வெளியீட்டினை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
ஒன்று பேஷன் & காஸ்மெடிக் நிறுவனமான நய்கா, மற்றொன்று தனியார் நிதி நிறுவனமான ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க். இந்த நிறுவனங்களின் பங்கு வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பினை பார்க்கலாம் வாருங்கள்.
IPO என்றால் என்ன?
அதற்கு முன்பாக பொதுப்பங்கு வெளியீடு (IPO) என்றால் என்ன? இதில் எப்படி பங்கேற்கலாம் என தெரிந்து கொள்வோம். பங்கு சந்தையில் முதன் முதலாக நுழையும் நிறுவனங்கள், முதல் முறையாக வெளியிடும் பங்குகளே பொது பங்கு வெளியீடு எனப்படுகிறது. இதனை தரகு நிறுவனங்கள் மூலம் வாங்கிக் கொள்ளலாம். முதல் முறையாக பங்கு சந்தையில் நுழைவதால் இந்நிறுவன பங்குகளின் விலை குறைவாக இருக்கும் என்பதால் சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
நய்கா நிறுவனம்
பேஷன் மற்றும் காஸ்மெடிக் பொருட்களை விற்பனை செய்து வரும் ஈ-காமர்ஸ் நிறுவனமான நய்கா, ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் வணிகம் செய்வது குறிப்பிடத்தக்கது. ஈ-காமர்ஸ் வணிகங்கள் மேம்பட்டு வரும் நிலையில், நய்கா நிறுவனத்தின் எதிர்காலம் நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அண்டை நாடுகளில் அழகு சாதன பொருட்களுக்கான சந்தையானது பெரும் வளர்ச்சி கண்டிருந்தாலும், இந்தியாவில் அந்தளவுக்கு வளர்ச்சி காணவில்லை எனலாம். ஆக வரும் காலத்தில் நய்கா நிறுவனத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
நய்கா ஐபிஓ எப்போது
நய்கா நிறுவனம் வரவிருக்கும் அக்டோபர் 28ம் தேதி பொது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இது மீண்டும் நவம்பர் 1ம் தேதி முடிவடையவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த பங்கு வெளியீட்டிற்கு இப்போதிருந்தே தயாராகலாம். நவம்பர் 11 அன்று இதன் பங்குகள் பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நய்கா விலை நிலவரம்
நய்கா நிறுவனத்தின் பொது பங்கு வெளியீட்டு விலை 1,085 - 1,125 ரூபாயாக நிர்ணயம், செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் 630 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வெளியீட்டினை செய்யவுள்ளது. மேலும் தற்போதுள்ள புரோமோட்டர்கள் மற்றும் பங்குதாரர்களின் 4.19 கோடி பங்குகளும் இந்த பங்கு வெளியீட்டில் விற்பனை செய்யப்படவுள்ளது.
எதற்காக ஐபிஓ
இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு அதன் சில்லறை வர்த்தகத்தினை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் சிறு பகுதி கடனையும் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கடனை செலுத்துவதன் மூலம், வட்டி விகிதம் குறையும், இதன் மூலம் லாபத்தினை அதிகரிக்க முடியும் என நய்கா தெரிவித்துள்ளது.
ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க் ஐபிஓ
ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க்கின் பொது பங்கு வெளியீடானது அக்டோபர் 29 அன்று தொடங்கவுள்ளது. இது நவம்பர் 2 அன்று இதன் வெளியீடு முடிவடையவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகள் வெளியிடப்படவுள்ளன. இதே அதன் புரோமோட்டர்களிடம் உள்ள 15.602.999 பங்குகளும் OFS மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன. இவ்வாறு வெளியிடப்படும் பங்கானது நவம்பர் 12 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் வங்கி சேவை
ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க் ஆனது வணிக ரீதியிலான டிஜிட்டல் வங்கி சேவையை செய்து வரும் நிதி நிறுவனமாகும். வளர்ந்து வரும் டிஜிட்டல் சந்தைக்கு மத்தியில் இந்த நிதி நிறுவனத்தின் எதிர்காலம் வரும் காலத்தில் இன்னும் மேன்மை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.