இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்போலியோ பங்குகள், முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் பெறும் பங்குகளாக உள்ளன.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவில் உள்ள டாடா குழுமத்தினை சேர்ந்த பங்கானது, ஒரே நாளில் பெருத்த நஷ்டத்தினை கொடுத்துள்ளது.
அது என்ன பங்கு? எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஒரே நாளில் ரூ.560 கோடி நஷ்டம்
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா பட்டியலில் உள்ள டைட்டன் நிறுவன பங்கினால் ஒரே நாளில் கிட்டதட்ட 560 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டைட்டன் நிறுவன பங்கின் விலையானது கிட்டதட்ட 7% இன்று மட்டும் சரிவினைக் கண்டுள்ளது. இன்று இதன் குறைந்தபட்ச விலை பி எஸ் இ-ல் 1911 ரூபாயினை தொட்டுள்ளது.
இன்றைய சரிவு?
பி எஸ் இ-ல் இப்பங்கின் விலையானது 6.06% அல்லது 124.80 சரிவினைக் கண்டு, 1933.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது. முடிவு விலையின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 1,71,817.69 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. கடந்த அமர்வில் இப்பங்கின் விலையானது 2060.15 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜுன் ஜுன்வாலா வசம்
கடந்த அமர்வின் முடிவு விலையுடன் ஒப்பிடும்போது, இப்பங்கின் விலையானது 124.80 ரூபாயாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.
மார்ச் 31, 2022 நிலவரப்படி, டைட்டன் நிறுவனத்தில் ரேகா ஜுன் ஜுன்வாலா வசம் 95,40,575 ஈக்விட்டி பங்குகள் அல்லது 1.07% பங்குகள் இருந்தது. இதே ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம் 3,53,10,395 பங்குகள் அல்லது 3.98% பங்குகள் இருந்தது. ஆக மொத்தம் 5.05% அல்லது 4,48,50,970 ஈக்விட்டி பங்குகளை கொண்டுள்ளது.
எவ்வளவு நஷ்டம்?
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம் உள்ள பங்குகளினால் (124.80*4,48,50,970), 559.74 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களில் 28% -க்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டின் இது வரையில்23% மேலாக சரிவில் காணப்படுகின்றது. இதே கடந்த 1 வருடத்தில் 13% ஏற்றம் கண்டுள்ளது.