கொரோனா தொற்றுக் காரணமாக வர்த்தக நேரத்தை மாற்றி வைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று முதல் ரிசர்வ் வங்கி பழைய வர்த்தக நேரத்திற்கு மாறியுள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 18ஆம் தேதியில் இருந்து ஆர்பிஐ கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து வர்த்தகத் தளமும் காலை 9 மணி முதல் வர்த்தகத்தை துவங்கும்.
ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் பல்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் கொரோனா தொற்றுக் காரணமாக ஏப்ரல் 7, 2020 அன்று மாற்றப்பட்டது.
கொரோனா தொற்று
இந்த மாற்றத்தின் விளைவாகச் செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் சுகாதார அபாயங்கள் அதிகரித்தன. பின்னர், செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம், நவம்பர் 9, 2020 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தக நேரம் கணிசமாக உயர்த்தப்பட்டு, கிட்டதட்ட கொரோனாவுக்கு முந்தைய அளவுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
9 மணி - 3.30 மணி
இந்நிலையில் இன்று முதல் அனைத்து வர்த்தகத் தளமும் காலை 9 மணி முதல் மதியம் 3.30 வரையில் இயங்கும் வகையில் கொரோனாவுக்கு முந்தைய அளவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த வர்த்தகச் சந்தையும் பழைய வர்த்தக நேரத்திற்கு மாற உள்ளது.
ஏப்ரல் 18 முதல்
ஏப்ரல் 18 முதல், அனைத்து வர்த்தகச் சந்தைகளின் வர்த்தக நேரம் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிற தளர்வுகள்
மேலும் இந்த மாற்றத்துடன் ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் அலுவலகங்களின் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாடுகள் கணிசமான அளவில் தளர்த்தப்பட்டுள்ளதால், ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சந்தைகள் திறக்கும் நேரத்தை கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய காலமான காலை 9 மணிக்கு துவங்கும் வகையில் மாற்றப்பட உள்ளது என ஆர்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முக்கியச் சந்தைகள்
இந்திய ரிசர்வ் வங்கி கால்/நோட்டீஸ்/டர்ம் மணி, மார்கெட் ரெப்போ-வில் இயங்கும் அரசு பத்திரங்கள், ட்ரை பார்ட்டி ரெப்போ அரசு பத்திரங்கள், கமர்சியல் பேப்பர் மற்றும் டெப்பாசிட் சர்டிபிகேட், ரெப்போ கார்பரேட் பத்திரங்கள், அனைத்து விதமான அரசு பத்திரங்கள், வெளிநாட்டு நாணயம்/ ரூபாய்க்கு எதிரான வர்த்தகம், அந்நிய செலாவணி ஆர்டர்கள், ரூபாய் வட்டி விகித ஆர்டர்கள் ஆகிய சந்தைகளை ஆர்பிஐ நிர்வாகம் செய்கிறது.