லாக்டவுன் காலத்தில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்த மும்பை பங்குச்சந்தையின் தொடர் வளர்ச்சி, இன்று பயமாக மாறியுள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்திலேயே சரிவுடன் காணப்பட்ட மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக 320 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதேபோல் நிஃப்டி 110 புள்ளிகள் வரையில் சரிந்தது.
இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவுக்கு என்ன காரணம்.
அமெரிக்காவில் தடுப்பூசி
பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவில் மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் துவங்கியுள்ளதை அடுத்து, அமெரிக்க அரசு அதிகளவிலான தொகையைக் கொரோனா மருந்துக்கும் மற்றும் விநியோகத்திற்கும் செலவு செய்து வரும் காரணத்தால் அமெரிக்காவில் பணவீக்கம் உயரவும், நாணய மதிப்பு சரியவும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
அமெரிக்கச் சந்தை
இதன் வாயிலாக ஏற்கனவே வர்த்தகத்தை மந்தமாக எதிர்கொண்டிருக்கும் அமெரிக்கா, தடுப்பூசி எதிரொலியாகப் பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பில் பாதிப்பு ஏற்படும் காரணத்தால் அமெரிக்கப் பங்குச் சந்தையில் டாவ் ஜோன்ஸ் 0.62 சதவீத சரிவையும், எஸ் அண்ட் பி 500 குறியீடு 0.44 சதவீத சரிவையும், நாஸ்டாக் வெறும் 0.50 வளர்ச்சியையும் கண்டுள்ளது.
ஆசிய சந்தை
அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆசிய சந்தையில் மிகவும் அதிகமாக இருக்கிறது. இன்று காலை வர்த்தக துவக்கம் முதல் ஆஸ்திரேலியா 0.49 சதவீத சரிவையும், ஷாங்காய் 0.05 சதவீத சரிவையும், ஹாங்காங் 0.69 சதவீத சரிவையும், ஜப்பான் நிக்கி 0.20 சதவீத சரிவையும், தைவான் 1 சதவீத சரிவையும் எதிர்கொண்டுள்ளது.
ரீடைல் பணவீக்கம்
இந்தியாவில் ரீடைல் பணவீக்கம் கடந்த 2 மாதமாகத் தொடர்ந்து 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் நவம்பர் மாத ரீடைல் பணவீக்கத்தின் அளவு 6.93 சதவீதமாகச் சரிந்துள்ளது.
ஆனால் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு இது போதுமானதாக இல்லாத காரணத்தால் பங்குச்சந்தையில் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.58 ரூபாயில் இருந்து 73.64 ரூபாயாகச் சரிந்துள்ளது. இது அன்னிய முதலீட்டாளர்களின் இந்திய பங்குச்சந்தை முதலீடுகள் மீது கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கித் துறை
இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கி பங்குகள் 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் தனியார் வங்கி பிரிவில் ஆக்சிஸ் வங்கி 2 சதவீதமும், ஐசிஐசிஐ மற்றும் இன்டஸ்இந்த் வங்கி தலா 1 சதவீத சரிவையும் எதிர்கொண்டுள்ளது.
டெலிகாம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மீது தொடுத்துள்ள புகாரின் காரணமாக இவ்விரு நிறுவனங்களின் பங்குகளும் 2 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.