கொரோனா வைரஸ் சாதாரன ரோட்டுக் கடை வியாபாரிகள் தொடங்கி அம்பானி வரை பாதித்து இருப்பதாகச் செய்திகளைப் பார்த்தோம்.
ஆனால் முகேஷ் அம்பானிக்கு அந்த செய்தி பொருந்தாது போல் இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை உலகம் முழுக்க பரவிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கூட சத்தம் காட்டாமல் தன் இமாலய சாதனைய மீண்டும் செய்து இருக்கிறார்.
அப்படி என்ன செய்துவிட்டார்..? வாருங்கள் பார்ப்போம்.
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்
இதை ஆங்கிலத்தில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்போம். அப்படி என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம். பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு ஒரு விலை இருக்கும். மொத்த பங்குகள் * ஒரு பங்கின் விலை = மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்.
சந்தை மதிப்பு
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் மதிப்பு (Market Capitalization) என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். ஒரு நிறுவன பங்கின் இன்றைய விலைக்கு, அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம்.
ரிலையன்ஸ் மதிப்பு
கடந்த டிசம்பர் 2019 காலத்தில் அதிகபட்சமாக 1,617 ரூபாயைத் தொட்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை. அப்போது ஒட்டு மொத்த ரிலையன்ஸ் கம்பெனியின் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வந்தது. அதன் பின் கொரோனாவால் சர சரவென பங்குகளின் விலை சரியத் தொடங்கிவிட்டது.
பெரிய சரிவு
கொரோனாவால், கடந்த மார்ச் 2020-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் பங்கு விலை சுமாராக 885 ரூபாய் வரைத் தொட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இப்போது மீண்டும் ரிலையன்ஸ் கம்பெனியின் பங்கு விலை சுமாராக 1,600 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
காரணம்
ரிலையன்ஸ் ஜியோவில் ஃபேஸ்புக் நிறுவனம் 9.9 % பங்குகளை வாங்கியது, அமெரிக்காவின் விஸ்டா ஈக்விட்டி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் 2.32 % பங்கை வாங்கியது. அதே போல சில்வர் லேக் கம்பெனியும் சுமாராக 1.15 % பங்குகளை வாங்கியது. இப்படி தொடர் முதலீடுகள் வந்ததால், இந்திய பங்குச் சந்தையில் ரிலையன்ஸின் பங்கு விலை தாறுமாறாக ஏறி இருக்கிறது.
இந்தியாவில் முதல் முறை
இந்தியாவிலேயே ஒரு கம்பெனி மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பைத் தொட்ட நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான். அந்த சாதனையை மீண்டும் செய்து இருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை. கொரோனா காலத்தில் எல்லாருக்கும் வியாபாரம் டல்லாகும் போது கூட, இவர்களுக்கு மட்டும் சொத்து மதிப்பு எகிறிக் கொண்டு இருக்கிறதே.