டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய வணிக சாம்ராஜ்யங்களில், நம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமும் ஒன்று. இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களை பட்டியல் போட்டாலும் நம் முகேஷ் அம்பானி முன் வரிசையில் வந்து உட்கார்ந்து இருப்பார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் என இரண்டு வியாபாரத்தை வைத்துக் கொண்டு நம் முகேஷ் அம்பானி ஆடும் ஆட்டம் இருக்கிறதே... அப்பா... ருத்ர தாண்டவம். அதற்கு சாட்சி ஏர்டெல், வொடாபோன் ஐடியா தான்.
அந்த ஆட்டத்தின் ஒரு சின்ன பரிசாக, இந்தியாவிலேயே முதல் முறையாக, எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியும் தொட முடியாத உயரத்தைத் தொட்டு இருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.
என்ன உயரம்
பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு விலை இருப்பதைப் போல, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு (Market Capitalization) என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். அதாவது இன்றைய விலைக்கு அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம்.
9.5 லட்சம் கோடி
இன்று பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை 1511 ரூபாயைத் தொட்டது. இந்த விலை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாழ்நாள் அதிகம். ஆக, 633 கோடி பங்குகள் * 1511 = 9.5 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைத் தொட்டு இருக்கிறது. இது இந்திய வரலாற்றிலேயே புதிய உச்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உயரத்தை இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும் தொட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2019-ல்
இந்த 2019-ல் 1,121 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், தற்போது 1,510 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக ஒரே வருடத்தில், ரிலையன்ஸ் பங்கு விலை சுமாராக 34 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. முதலீடு செய்து இருந்தால் நாமும் அனுபவித்து இருக்கலாம். ம்ம்ம்ம் நமக்கு எங்கே இந்த அதிர்ஷ்டம் எல்லாம்.
சென்செக்ஸ்
ஆனால், இந்தியாவின் முக்கிய இண்டெக்ஸ்களில் ஒன்றாக இருக்கும் சென்செக்ஸோ 36,254-க்கு வர்த்தகமாகத் தொடங்கி இன்று சுமாராக 40,450 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக இண்டெக்ஸ் 11.5 சதவிகிதம் தான் ஏற்றம் கண்டு இருக்கிறது. ஆக 2019-ல் சென்செக்ஸை விட 3 மடங்கு அதிக லாபம் கொடுத்து இருக்கிறது ரிலையன்ஸ்..!
வரலாற்று சாதனைகள்
கடந்த ஆகஸ்ட் 2018-ல் தான் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள், இந்தியாவிலேயே 8 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனம் என்கிற பெயரை தட்டிப் பறித்தது. அதே போல 9 லட்சம் கோடி சந்தை மதிப்பைத் தொட்ட கம்பெனி என்கிற பெயரையும் கடந்த 2019 அக்டோபர் 18 அன்று பறித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து 10 லட்சம் கோடி
8 லட்சம் கோடி ரூபாய், 9 லட்சம் கோடி ரூபாய் எல்லாம் போய் இப்போது 9.5 லட்சம் கோடி ரூபாய் என்கிற சாதனையையும் படைத்து இருக்கிறது. கூடிய விரைவில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சுக்ரன் பார்வை ஆழமாக இருக்கும் பட்சத்தில், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனம் என்கிற பெயரையும் ரிலையன்ஸ் தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கலாம். இனியாவது இந்த பங்கை வாங்கி லாபம் பார்க்கலாமா என விசாரியுங்கள் மக்களே..!