இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆகத் திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. இப்புதிய உச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன முதலீட்டாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ரிலையன்ஸ் பங்குகளை வாங்கலாமா..? வேண்டாமா..?
புதிய உச்சம்
புதன்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் இன்டராடே வர்த்தகத்தில் 1.65 சதவீத உயர்ந்து ஒரு பங்கின் விலை எப்போதும் இல்லாத வகையில் 2,004.00 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஒரு நாள் வர்த்தகத்தில் அதிகப்படியாக 2,010 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
அதிரடி உயர்வு
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் லாக்டவுன் விதிக்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் பங்குகள் அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்தது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்குப் பின் சுமார் 130 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு 13.55 லட்சம் கோடி ரூபாய்.
வளர்ச்சி வாய்ப்புகள்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வந்த புதிய முதலீடுகள் மூலம் ஜியோ புதிய 2ஜி, 3ஜி, 4ஜி ஸ்மார்ட்போன்கள், 5ஜி டெலிகாம் சேவை விரிவாக்கம், ஜியோமார்ட் வர்த்தக விரிவாக்கம், ரீடைல் வர்த்தகம் விரிவாக்கம் ஆகிய திட்டங்கள் அடுத்தடுத்து திட்டமிட்டு இருக்கும் நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது.
முதலீட்டு நிறுவனங்கள்
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி முதலீட்டு ஆய்வு நிறுவனமாகத் திகழும் மோத்திலால் ஆஸ்வால் செக்யூரிட்டீஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை 2020 ரூபாய்க்கு வாங்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.
இதேபோல் கோட்டாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டிஸ் அடுத்தடுத்து ஜியோ அறிவிக்கும் டிஜிட்டல் சேவைகள் மற்றும் சவுதி அராம்கோ உடனான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளது
முகேஷ் அம்பானி
இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் மூலம் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 1.66 சதவீத வளர்ச்சி அடைந்து 75.1 பில்லியன் டாலராக வளர்ச்சி அடைந்துள்ளது.