அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் என்கிற பிரைவேட் ஈக்விட்டி கம்பெனி, இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியில், 1.34 சதவிகித பங்குகளை சுமாராக 6,600 கோடிக்கு விலை கொடுத்து வாங்கி இருக்கிறது.
ஃபேஸ்புக், விஸ்டா ஈக்விட்டி, சில்வர் லேக் பார்டனர்ஸைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியில் செய்யப்படும் நான்காவது டீல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகும் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த பங்குகளில், சுமாராக 85 % பங்குகள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிடம் தான் இருக்கிறது.
மதிப்பு
ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியின் மதிப்பு சுமாராக 5.16 லட்சம் கோடி ரூபாய் என அறிவித்து இருக்கிறது அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் பிரைவேட் ஈக்விட்டி கம்பெனி. இதுவரை முகேஷ் அம்பானி, கடந்த 4 வாரங்களில், ரிலையன்ஸ் ஜியோ பங்குகளை விற்று 67,194 கோடி ரூபாயைத் திரட்டி இருக்கிறார்.
நோ கடன்
முகேஷ் அம்பானி, "கூடிய விரைவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் தன் கடன்களை எல்லாம் அடைத்துவிட்டு, கடன் இல்லாத நிறுவனமாக உருவாகும்" எனச் சொன்னது நினைவில் இருக்கலாம். அந்த கனவுக்கு, இப்போது ரிலையன்ஸ் ஜியோ பங்குகள் விற்பனை உதவிக் கொண்டு இருக்கிறது போலத் தெரிகிறது. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும், ரிலையன்ஸ் பங்கு விலைக்கு வருவோம்.
பங்கு விலை
ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி பங்குகளை ஜெனரல் அட்லாண்டிக் வாங்கிய போதிலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் பங்குகளின் விலை என்னவோ இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் விலையை விட சுமாராக 16 ரூபாய் சரிந்து, தற்போது 1,442 ரூபாய்க்கு ரிலயன்ஸ் பங்கு விலை தடுமாறிக் கொண்டு இருக்கிறது. சுருக்கமாக ஜியோ - அட்லாண்டிக் டீல், RIL பங்கு விலையை உயர்த்துவதில், பெரிதாக வேலைக்கு ஆகவில்லை.
விலை சரிவு
கொரோனா வைரஸ் செண்டிமெண்ட் பாதித்த காலத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி பங்குகள் சுமாராக 885 ரூபாய் வரைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தகக்து. ஆனால் இந்த விலை வீழ்ச்சியை, ஃபேஸ்புக் டீல், அசால்டாக சரி செய்துவிட்டது. ஆகையால் தான் பங்கு விலை 1,400 ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
உச்சம் தொடுமா
ஃபேஸ்புக் டீல் முடிந்த உடனேயே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை தன் பழைய உச்சமான 1602 ரூபாயைத் தொடும், என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் 1,556 ரூபாய் வரை தொட்ட விலை, மீண்டும் சரியத் தொடங்கிவிட்டது. இனி எப்போது ரிலையன்ஸ் மீண்டும் தன் பழைய உச்சத்தைத் தொடும் எனத் தெரியவில்லை.