பங்கு சந்தையில் மல்டிபேக்கர் பங்குகள் என பலரும் கூறுவதை கேள்விபட்டிருப்போம். அப்படி முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கிய, கோடீஸ்வரர் ஆக்கிய ஒரு பங்கினை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
பொதுவாக பங்கு சந்தைகளில் இப்படி ஏற்றம் கண்ட பங்கினை விட, இனி ஏற்றம் காணும் பங்கினை கூறுங்கள் என முதலீட்டாளர்கள் கூறுவதுண்டு. ஆனால் ஏன் இந்த பங்கின் விலையானது ஏற்றம் கண்டது? இந்த பங்கின் விலை இனி எப்படியிருக்கும்? இனி ஒரு பங்கினை எந்த கோணத்தில் எல்லாம் பார்க்கலாம் என்ற ஐடியா கிடைக்கும்.
ஆக அடுத்தமுறை ஒரு பங்கினை வாங்கும்போது இது மேலும் உதவிகரமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.
தீபக் நைட்ரேட் நிறுவனம்
அந்த வகையில் தீபக் நைட்ரேட் நிறுவனம் எப்படி இந்தளவுக்கு ஏற்றம் கண்டது உள்ளிட்ட முக்கிய காரணிகளை பார்க்கலாம்.
தீபக் நைட்ரேட் நிறுவனம் ஒரு கெமிக்கல் நிறுவனம் ஆகும். இது பல்வேறு வகையான கெமிக்கல்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து வருகிறது. கெமிக்கல்களுக்கான தேவையானது வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என்ற நிலை நிலவி வருகிறது. ஆனால் தற்போது சப்ளையானது போதுமான அளவுக்கு இல்லை என்பதே உண்மை.
தேவை அதிகம்
குறிப்பாக சீனாவில் கடும் மின்வெட்டு நிலவி வரும் நிலையில், அது கெமிக்கல் உற்பத்தியினை பாதிக்கலாம். இதனால் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவிலான இறக்குமதிகள் பாதிக்கப்படலாம். இதனிடையே அந்த வாய்ப்பானது தீபக் நைட்ரேட் நிறுவனத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி குறையலாம்
இந்தியாவைப் பொறுத்தவரையில் அதிக அளவிலான கெமிக்கல்கள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. ஏற்கனவே சீனாவில் சுற்றுச் சூழலை சரி செய்யும் விதமாக பல கெமிக்கல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்துள்ளன. இதற்கிடையில் தற்போது நிலவி வரும் கடுமையான மின்வெட்டின் காரணமாக, இன்னும் உற்பத்தி குறைய வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் இருந்து வருகின்றன.
பங்கு விலை உச்சம்
இந்த நிலையில்தான் இந்த பங்கின் விலையானது தொடர்ந்து வரலாறு காணாத அளவு உச்சத்தை தொட்டு வருகின்றது. சொல்லப்போனால் நடப்பு ஆண்டில் நல்ல லாபத்தினை கொடுத்த, முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கிய ஒரு பங்கு எனலாம். குறிப்பாக நீண்டகால முதலீட்டாளர்களை கோடீஸ்வரர் ஆக மாற்றியிருக்கலாம். உதாரணத்திற்கு 10 ஆண்டுகளில் இந்த பங்கின் விலையானது 14,750% லாபத்தினை கொடுத்துள்ளது.
மாத நிலவரம்
கடந்த ஒரு மாதத்தில் இந்த பங்கின் விலையானது 6% அதிகரித்துள்ளது, இது 2,434 ரூபாயில் இருந்து, 2,583 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஆறு மாதத்தில் 60% அதிகரித்து, 1600 ரூபாயில் இருந்து, 2,583 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் 987 ரூபாயில் இருந்து, 2,583 ரூபாயாக, சுமார் 160% ஏற்றம் கண்டுள்ளது.
ஒரு வருட ஏற்றம்
இதே கடந்த ஒரு ஆண்டில் இந்த பங்கின் விலையானது, 720 ரூபாயில் இருந்து, 2,583 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 260% ஆகும். இதே கடந்த 5 ஆண்டுகளில் 123 ரூபாயில் இருந்து, 2,583 ரூபாயாக அதிகரித்துள்ளது. கிட்டதட்ட 2,000% ஏற்றம் கண்டுள்ளது. இதே 10 ஆண்டுகளில் 17.40 ரூபாயில் இருந்து 2,583 ரூபாயாக, அதாவது 14,750% அதிகரித்துள்ளது.
பல லட்சம் லாபம்
உதாரணத்திற்கு இந்த பங்கில் 1 மாதத்திற்கு முன்பு 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 1,06 லட்சம். இதே ஆறு மாதத்திற்கு முன்பு செய்திருந்தால், இன்று 1.60 லட்சம் ஆக உங்களது முதலீடு வளர்ந்திருக்கும். இதே 1 வருடம் முன்பு முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 3.60 லட்சம் ரூபாய். இதே 5 வருடம் அல்லது 10 வருடத்திற்கு முன்பு இதே 1 லட்சம் ரூபாயினை முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு பல லட்சங்கள்.
இன்றைய நிலவரம்
தீபக் நைட்ரேட் நிறுவனத்தின் இன்றைய பங்கு நிலவரம் 4.80% குறைந்து அல்லது 122.70 ரூபாய் குறைந்து, 2,432.40 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 2,616.50 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 2,418 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-யில் 4.91% அல்லது 125.55 ரூபாய் குறைந்து, 2,431.85 ரூபாயாக குறைந்து முடிவடைந்துள்ளது.