பங்கு சந்தையில் முதலீடு என்றவுடன் பலருக்கும் எழும் கேள்வி எந்த பங்கினை வாங்குவது? அதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது தான்.
பொதுவாக பங்கு சந்தையில் நீண்டகால முதலீடுகள் நல்ல லாபம் கொடுக்கலாம் என்பதை தொடர்ந்து பல கட்டுரைகளில் பார்த்து வருகின்றோம். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது முன்னணி ஐடி நிறுவனமான மாஸ்டெக் நிறுவனத்தின் பங்கு விலை பற்றி தான்.
இதற்கிடையில் இன்றைய பங்கு சந்தை நிலவரம் பற்றியும் தெரிந்து கொள்வோம். சென்செக்ஸ் 767 புள்ளிகள் அதிகரித்து, 60,686.69 புள்ளிகளாகவும், நிஃப்டி 229.15 புள்ளிகள் அதிகரித்து, 18,102.75 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இன்றைய மாஸ்டெக் நிலவரம்
மாஸ்டெக் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று அதன் விலை சந்தை முடிவில் ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது. குறிப்பாக என்.எஸ்.இ-ல் 1.04% அல்லது 29.25 ரூபாய் அதிகரித்து, 2,845.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே பிஎஸ்இ-ல் 1.10% அல்லது 31.10 ரூபாய் அதிகரித்து, 2850 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் இன்றைய உச்சம் 2,871.40 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 2,805 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 3,666 ரூபாயாகும்.
கணிப்பு என்ன?
சமீபத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 3,840 ரூபாயினை தொடலாம் என நிபுணர்கள் கணித்திருந்தனர். இதற்கிடையில் இன்டஹ் பங்கின் விலையானது தொடர்ச்சியாக ஏற்றத்தினையே கண்டு வருகின்றது. இந்த நிறுவனம் சமீபத்தில் இங்கிலாந்துடன் ஒரு வலுவான கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், இன்னும் ஆர்டர்கள் வலுவாக உள்ளது. இங்கிலாந்து அரசிடம் 7 ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் 800 மில்லியன் பவுண்டுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
பங்கு விலை அதிகரிக்கலாம்
மொத்தத்தில் இங்கிலாந்து அரசுடனான இதன் உறவு மிகவும் மேம்பட்டு வரும் நிலையில், அதன் ஒப்பந்த அளவுகள், அதன் காலம், அமெரிக்காவில் விரிவுபடுத்தி வருதல் என பலவும் இதற்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் எபிடா விகிதம் மேல் நோக்கி அதிகரித்து வருகின்றது. இதன் வருவாயும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் பங்கு விலையானது மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
1500% மேல் வருவாய்
இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 1.5 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் 1,500% மேல் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 27, 2020ல் 172.35 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, இன்று 2871 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆக பிஎஸ்இ-ல் மட்டும் 1,565% ஏற்றம் கண்டுள்ளது.
எவ்வளவு லாபம்?
ஆக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தோமேயானல் இன்று அதன் மதிப்பு 16.65 லட்சம் ரூபாயாகும். இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 102.43% அதிகரித்துள்ளது. கடந்த மூன்று அமர்வுகளாகவே இந்த பங்கு விலையானது சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படியுள்ளது?
இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கும் கீழாக இருந்தாலும், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கும் மேலாக உள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும் மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக குறையும் போது வாங்கி வைக்கலாம்.
ஓராண்டு நிலவரம் என்ன?
கடந்த ஓராண்டில் இந்த பங்கின் விலையானது 217.43% ஏற்றம் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 148.04% ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதே ஒரு மாதத்தில் 8.65% ஏற்றத்தில் காணப்படுகின்றது.
அட்ரிஷன் குறித்து கவலை
கடந்த அக்டோபர் 19, 2021 அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 3,666 என்ற 52 வார உச்சத்தினை தொட்டது. எனினும் இந்த நிறுவனம் அதன் இரண்டாம் காலாண்டு முடிவின் போது வருவாய் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், அட்ரிஷன் விகிதம் மிக கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.