பங்கு சந்தையில் முதலீடா? பாத்து கவனமா இருப்பா? இன்றும் இப்படி சொல்பவர்கள் தான் அதிகம்.
ஆனால் சிலருக்கு லாபத்தினையும் கொடுத்துக் கொண்டு தான் உள்ளது. எப்போதுமே நஷ்டம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அது நாம் உள்ளே நுழையும் நேரமும், வெளியேறும் நேரமும் சரியாக அமைந்தால் போதும்.
பொதுவாக சந்தையில் புதியதாக நுழைபவர்கள் புரோக்கிங் நிறுவனங்கள் கொடுக்கும் டிப்ஸ்களை பயன்படுத்தியும், நண்பர்கள் கூறுவதை பயன்படுத்தியும் முதலீடு செய்வார்கள்.
பங்கு சந்தையில் முதலீடா?
ஆனால் இறுதியில் இருப்பதை எல்லாம் இழந்து விட்டு, பங்கு சந்தையா வேண்டாவே வேண்டாம். நீயும் அந்த பக்கம் போய்விடாதே என்பார்கள். பொதுவாக ஒரு மார்கெட்டில் சென்று காய்கறி வாங்க வேண்டும் என்றால் கூட, பல கடைகளை சுற்றி பார்த்து விட்டு, இறுதியில் ஒரு கடையை தேர்வு செய்வோம்.
இதனை யோசியுங்கள்
ஏன் காய்கறி நன்றாக இருக்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். விலையும் சற்று குறைவாக இருக்க வேண்டும். தெரிந்த கடைக்காரராக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இப்படி அனைத்தும் தெரிந்து கொண்ட பின்னரே வாங்குவோம். சில சமயங்களில் தெரிந்த கடையாகவே இருந்தாலும், காய்கறிகள் வாடியிருந்தால், அடுத்த கடையை தேடிச் செல்வோம். ஒரு நாள் பயன்படுத்தும் காய்கறிக்கே பல முறை பார்த்து வாங்கும் நாம், எதிர்கால நலன் கருதி செய்யும் முதலீட்டுக்கு அடுத்தவர் சொன்னதை செய்கிறோமே ஏன். அதனை என்றேனும் யோசித்து இருக்கிறோமா? என்றால் நிச்சயம் பலரும் செய்வதில்லை.
விலை அதிகரிக்கும்
அதனைபோலத் தான் சந்தையில் எந்த நிறுவனம் நன்றாக உள்ளது. யார் சரியான பொருளை விற்கிறார்கள். எது எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என்று யூகிக்க வேண்டும். உதாரணத்திற்கு சிலர் வெங்காயம் பயிர் செய்து, நன்கு விலைவாசி அதிகரிக்கும் வரை காத்திருந்து விற்பர். சந்தையில் தேவை அதிகரிக்கும் போது அதன் விலையும் அதிகரிக்கும் என்பது உலக நியதி.
எதற்கு தேவை உண்டு
ஆக எப்போது தேவை அதிகரிக்கும். எப்போது வாங்கலாம் என்பதே பங்கு சந்தையின் சில நுணுக்கங்கள். சில்லறை விற்பனை பொருட்களை எடுத்துக் கொண்டால் தேவை என்பது எப்போதும் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. அதே போல மின்சார வாகனங்களின் தேவை என்பது தற்போது தான் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆக அது சார்ந்த பங்குகளை வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் அதனையும் நிறுவனத்தினை அலசி பின்னர் வாங்குவது சிறந்தது.
ராஜ் ரதன் குளோபல் பவர் லிமிடெட்
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் நிறுவனம் ராஜ் ரதன் குளோபல் பவர் லிமிடெட். இந்தியாவின் முன்னனி உயர் கார்பன் ஸ்டீல் கம்பி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது ஆட்டோமொபைல் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர ஸ்டீல் வயர்களை தயாரிக்கும் ஒரு நிறுவனமாகும்.
பங்கு விலை நிலவரம்
இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த ஆண்டு ஜூலை 20, 2020ல் 250.55 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 1867.25 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இது சுமார் 745% லாபத்தில் உள்ளது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் சுமார் 40% லாபத்தில் மட்டுமே உள்ளது.
எவ்வளவு லாபம்
ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தோமானால், இன்று அதன் மதிப்பு 7 லட்சத்திற்கு மேல். இன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 5% ஏற்றம் கண்டு 1867.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது தான் இன்றைய உச்ச விலையும், 52 வார உச்ச விலையும் ஆகும்.
டெக்னிக்கலாக எப்படியுள்ளது?
இந்த பங்கின் விலையானது தற்போது 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கும் மேலாக காணப்படுகிறது. அதோடு தொடர்ச்சியாக இந்த நிறுவனம் தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக லாபத்தினை கண்டு வருகின்றது. இதுவும் இந்த நிறுவனத்திற்கு சாதகமாக விஷயமாக உள்ளது. மேலும் தேவையும் தற்போது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இந்த பங்கின் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.