பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று இருந்து வந்த வரம்பினை 20,000 ரூபாயாகக் குறைத்துள்ளனர். இந்தப் புதிய வரம்பு குறைப்பு அக்டோபர் 31-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
ஏன்?
ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்த புகார்கள் அதிகளவில் வருவதாகவும், பணப் பரிவர்த்தனையினைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்கவும் ஏடிஎம் / டெபிட் கார்டு ரொக்க பரிவர்த்தனை வரம்பினை குறைத்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசு என்னதான் டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து விளம்பரப்படுத்தி வந்தாலும் ரொக்கப் பரிவர்த்தனையின் அளவு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
பணம் எடுக்கும் வரம்பு குறைப்பால் ஏற்படும் நன்மை
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் / டெபிட் கார்டுகளில் தற்போது ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை பணம் எடுக்க அனுமதி அளித்து வரும் நிலையில் இந்த முடிவினால் மோசடியின் போது ஏற்படும் இழப்பு குறையும் என்று கூறுகின்றனர்.
மோசடிகள்
எஸ்பிஐ வங்கிக்கு வரும் டெபிட் கார்டு பரிவத்தனை குறித்த புகார்களில் ஸ்கிம்மர் மொசடிகளும் உள்ளது என்றும், இது டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் பின் எண்ணைப் பயனருக்கு மற்றும் வங்கிக்குத் தெரியாமல் திருடி பணத்தினை எடுத்து மோசடி செய்யும் ஒரு முறை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேக்னட்டிக் டேப் கார்டு மற்றும் சிப் கார்டு
பெரும்பாலான ஏடிஎம் கார்டு பயனர்கள் ஏடிஎம் / டெபிட் கார்டு போன்ற மோசடிகளில் அதிகளவில் ஏமார்ந்து வருகிறனர். இதனைக் குறைக்கவே மேக்னட்டிக் டேப் கார்டுகளை நீக்கி சிப் கார்டுகளைப் பயன்படுத்துவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
சிப் கார்டுகள்
2018 டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளும் மேக்னட்டிக் டெபிட் கார்டுகளை நீக்கிவிட்டு புதிய சிப் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
பிற வங்கிகள்
எஸ்பிஐ வங்கி தவிர்த்து பிற வங்கிகளின் ஏடிஎம்களில் நீண்ட காலமாகவே ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டு வந்த எஸ்பிஐ வங்கி அதன் வரம்பினை 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகக் குறைத்து இருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.