மாத சம்பளம் பெறுபவர்களுக்கு 1-ஆம் தேதி அன்று கையில் கிடைக்கும் சம்பளம் 5-ஆம் தேதிக்குள் காலியாகி விடுகிறது. ஏற்கனவே வாழ்க்கைச் செலவுகள் சாமானியர்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கையில், சேமிப்பதற்கு எங்கே போவது? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. இதுதான் உண்மையிலேயே எதார்த்தமும் கூட. நீண்ட நாட்களாக சம்பளம் பெறுபவர்களுக்கு ஊதியத்தில் அந்த அளவு அதிகரிப்பு இல்லை. இருந்தாலும் தொடர்ந்து செலவுகள் மட்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அனைவரும் சிறு தொகையாவது சேமிக்க வேண்டும் என்பதற்காக இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி ஒரு திட்டத்தை கொண்டு வர ஆலோசித்து வருகிறது.
எப்படி நிறுவனங்கள் உங்கள் கைக்கு சம்பளம் கிடைப்பதற்கு முன்னரே PF பிடித்தம் செய்து கொண்டு சம்பளத்தை வழங்குகின்றனவோ? அதேபோல ஊழியர்கள் விரும்பும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் பணத்தை முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு, செபி பரிந்துரை வழங்கியுள்ளது.
தற்போது வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய, ஒரு சில விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. நீங்கள் வேறு ஒருவரின் அக்கவுண்டில் இருந்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியாது. முதலீடு செய்ய வேண்டுமானால் உங்களுடைய சொந்த வங்கி கணக்காக இருக்க வேண்டும். இதுவரையில் வேறு ஒருவர் வங்கி கணக்கில் இருந்து முதலீடு செய்ய செபி அனுமதி வழங்கவில்லை. இதில் தற்போது ஒரு தளர்வை கொண்டுவர செபி ஆலோசனை வழங்கியுள்ளது.

செபியின் திட்டம் என்ன?: நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு மாத சம்பளம் கிடைக்கும் அல்லவா? இதில் எப்படி PF பிடித்தம் செய்யப்படுகிறதோ? அதேபோல நீங்கள் விரும்பும் தொகையை, நீங்கள் நினைக்கும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் சார்பாக நீங்கள் பணி புரியும் நிறுவனங்கள் இதைச் செய்யும். ஆனால் அதுவும் உங்களுடைய ஒப்புதலின் பெயரில் தான் செய்யப்படும்.
மேலும் இந்தத் திட்டம் குறிப்பாக ஒவ்வொரு ஊழியரின் விருப்பத்தில் பெயரில் மட்டும் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக எந்த நிறுவனமும் உங்களை கட்டாயப்படுத்த முடியாது. உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். அப்படியானால் எவ்வளவு தொகை பிடித்தம் செய்ய வேண்டும்?, எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்? என்பதை உங்கள் நிறுவனத்திடம் தெளிவாகக் கூற வேண்டும்.
பிறகு உங்களுக்கு சம்பளம் கிடைக்கும் நாள் என்று அந்த தொகையை மட்டும் பிடித்தம் செய்து கொண்டு, மீதி சம்பளம் உங்கள் அக்கவுண்ட்டிற்கு வந்து விடும். முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபமும் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் நீங்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு எந்த தொகையும் செல்லாது. அதேபோல டிவிடெண்ட் கிடைத்தாலும் உங்களுடைய வங்கி கணக்கிற்கு தான் வரும்.
எந்தெந்த நிறுவனங்கள் இணையலாம்?: தற்போது குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே செபி பரிந்துரை வழங்கியுள்ளது. அந்த வகையில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், EPFO பதிவு பெற்ற நிறுவனங்கள் மற்றும் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் போன்றவை முதல் கட்டமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இணைய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது போன்ற நிறுவனங்கள் அரசின் கண்காணிப்பின் கீழ் இயங்கி வருவதால் முறைகேடுகள் நடக்கும் வாய்ப்புகள் குறைவு.
செபி வழங்கி இருக்கும் இந்த ஆலோசனைக்கு முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் என்ன பதிலளிக்கின்றன என்பதை பொறுத்து முறைப்படி இந்த திட்டம் கொண்டு வரப்படும். அதற்கு முன்னர் அனைவரின் கருத்துக்களை கேட்டு அறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சேமிப்பை தள்ளிப் போடும் ஊழியர்களுக்கு இது போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்படுவது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் சம்பளம் கைக்கு வருவதற்கு முன்னரே முதலீட்டுக்குச் சென்று விடுவதால் செலவுகள் குறைந்து எதிர்கால சேமிப்பு தானாகவே உருவாக்கப்படும். ஒருவேளை உங்கள் நிறுவனமும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யச் சொன்னால் நீங்கள் செய்வீர்களா?


Click it and Unblock the Notifications