இன்று முதல் பங்கு சந்தையில் அமலுக்கு வரவிருக்கும் மார்ஜின் விதி முறைகள், பங்கு சந்தை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்பவராக இருந்தால், நிச்சயம் இது பற்றி தெரிந்திருக்கலாம். பங்கு சந்தையில் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இது பின்னடைவை தரலாம் என்றாலும், வர்த்தகர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை செபி எடுத்துள்ளது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமே.
முதலில் புதிய விதிமுறைகள் பற்றி பார்க்கும் முன்பு பங்கு சந்தையில் மார்ஜின் என்றால் என்ன? லீவரேஜ் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
லீவரேஜ் வாங்கி வணிகம்
உதாரணத்திற்கு நீங்கள் பங்கு சந்தையில் ஒரு பங்கினை வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் 1000 ரூபாய் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் உங்களது டீமெட் கணக்கில் 5,000 ரூபாய் மட்டுமே வைத்துள்ளீர்கள். நீங்கள் இண்ட்ராடே வணிகத்திற்காக தரகு நிறுவனங்களிடம் லீவரேஜ் (leverage) வாங்கி, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான வணிகத்தினை வெறும் 5,000 ரூபாயில் வணிகம் செய்கிறீர்கள்.
ரிஸ்க் எடுத்து பங்கை வாங்குதல்
தற்போது நீங்கள் வெறும் 5000 ரூபாயினை வைத்துக் கொண்டு லீவரேஜ் மூலமாக, உங்களது டீமேட் கணக்கில் 100 பங்குகளை வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். சாதாரணமாக ஒரு பங்கின் விலை 1000 ரூபாய் எனும் போது, 100 பங்குகளுக்கு உங்கள் கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். ஆனால் லீவரேஜ் வாங்கி வெறும் 5,000 ரூபாயில் ரிஸ்க் எடுத்து 100 பங்குகளை வாங்கி வைத்துள்ளீர்கள்.
லீவரேஜ் விகிதம்
இந்த லீவரேஜ் விகிதம் என்பது பங்கு தரகு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாக, அவர்கள் ரிஸ்க் எடுப்பதற்கு ஏற்ப கொடுக்கின்றன. ஏனெனில் இதனால் வரும் பிரச்சனைகளையும் அவர்கள் தான் எதிர்கொள்ள போகிறார்கள். இன்று சில தரகு நிறுவனங்கள் அதிக வால்யூம் செய்ய வேண்டும் என்பதற்காக, தாறுமாறாக லீவரேஜினை கொடுக்கின்றன.
பலத்த நஷ்டம்
உதாரணத்திற்கு நீங்கள் வாங்கிய பங்கு விலையானது எதிர்பாராத விதமாக திடீரென 10% சரிவினைக் கண்டுள்ளது என வைத்துக் கொள்வோம். அப்போது 1000 ரூபாய் மதிப்புள்ள அந்த பங்கின் விலை, 900 ரூபாய்க்கு செல்லும். ஆக ஒரு பங்கிற்கு உங்களுக்கு 100 ரூபாய் நஷ்டம். தற்போது உங்களிடம் 100 பங்குகள் இருக்கும் நிலையில், 100 பங்கிற்கும் சேர்த்து உங்களுக்கு 10,000 ரூபாய் நஷ்டம் ஆகும்.
யாருக்கு நஷ்டம்
மேற்கண்ட இந்த 10,000 ரூபாய் நஷ்டத்தில் ஏற்கனவே வர்த்தகர்கள் 5,000 ரூபாயினை கொடுத்து மட்டுமே நீங்கள் வர்த்தகம் செய்துள்ளீர்கள். இதனால் நீங்கள் மேற்கொண்டு 5,000 ரூபாய் தரகு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும். இதனை நீங்கள் கொடுத்து விட்டால் பிரச்சனை இல்லை. இதனை கொடுக்காவிட்டால், தரகு நிறுவனங்களே கொடுக்க வேண்டிய நிலைக்கு செல்லும். இது சிறிய பங்கு, சிறிய அளவிலான சரிவு என்பதால் பரவாயில்லை. ஆனால் ஏதேனும் முக்கிய டேட்டா நேரத்தில் எதிர்பாராத விதமாக பலத்த சரிவினைக் காணும் போது, வர்த்தகர்கள் ஆயிரம் ஆயிரமாய் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் போது, நஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்.
ஏன் கடுமையாக்கப்படுகின்றன?
இப்படி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் ஏற்படும் நஷ்டங்களை தரகு நிறுவனங்கள், கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். கட்ட முடியாத பட்சத்தில் அது செபி வரையில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதனால் தான் செபி இந்த விதிமுறைகளை படிப்படியாக கடுமையாக்கி வருகின்றது. இது நல்ல விஷயம் தானே. அப்படி ஏதேனும் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லையே என கூறுவது புரிகிறது.
தரகு நிறுவனங்களின் கவசம்
இதில் சில பிரச்சனைகளும் உண்டு. தரகு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவர, லீவரேஜ் என்ற ஆப்சனை தான் ஒரு கவசமாக பயன்படுத்துகின்றன. இதன் மூலம் குறைந்த தொகையில் வணிகம் செய்து அதிகம் லாபம் பார்க்கலாம் என்ற ஆசையும் வர்த்தகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. ஆக இண்ட்ராடே வணிகர்களுக்கு இது பிரச்சனையாக இருந்தாலும், அவர்களின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் என்பதால். இது நிச்சயம் நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறை தான்.
லீவரேஜ் இல்லாவிட்டால் என்ன?
உதாரணத்திற்கு மேற்கண்ட 5000 ரூபாய்க்கு 100 பங்குகள் வாங்க வேண்டிய இடத்தில், முழு மார்ஜின் தொகையும் செலுத்தினால் உங்களுக்கு வெறும் 5 பங்குகள் மட்டுமே கிடைக்கும். ஆக இதனால் லாபம் கிடைத்தாலும் வெறும் 5 பங்குகளுக்கு என்ன லாபமோ அது தான் கிடைக்கும். நஷ்டமாக இருந்தாலும் 5 பங்குகளுக்கு தான் கிடைக்கும். மேற்கூறியவாறு ஒரு பங்குக்கு நூறு ரூபாய் நஷ்டம் என வைத்துக் கொண்டாலும், 5 பங்குக்கு 500 ரூபாய் மட்டுமே நஷ்டமாகி இருக்கும். ஆனால் லீவரேஜ் வாங்கி வர்த்தகம் செய்வதால், கையிலிருக்கும் 5000 ரூபாய் நஷ்டத்தோடு, கூடுதலாக இன்னும் 5000 ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வர்த்தகர் தள்ளப்படுகின்றார்.
புதிய விதி என்ன?
செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த விதிகள் ஏற்கனவே இருக்கும் விதிகள் தான் என்றாலும், தற்போது கடுமையாக அமலுக்கு கொண்டு வரப்படவிருக்கின்றது.
பங்குகளுக்கு var + elm தொகையை முழுமையாக வாங்கப்பட வேண்டும். மார்ஜின் முழுமையாக வசூலிக்க வேண்டும்.
இதே F&Oவிற்கு SPAN + EXPOSURE தொகை முழுமையாக வசூலிக்கப்பட வேண்டும். இனி லீவரேஜ் அதிகம் கொடுக்க கூடாது என செபி தனது விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.
இந்த விதிகள் கடந்த டிசம்பர் 2020 முதல் 4 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் 1, 2021 முதல் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மார்ஜின்
உதாரணத்திற்கு நீங்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கினை வாங்க வேண்டும் என வைத்துக் கொள்ள வேண்டும். 12.61% (Var) + 3.50% ELR = மொத்தம் மார்ஜின் 16.11% நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். இப்படி ஓரு பங்கிற்கும் தேவையான மார்ஜின் விகிதத்தினை https://www.bseindia.com/markets/equity/eqreports/margin.aspx பி.எஸ்.இ-யின் தளத்திலேயே பெற்றும் கொள்ளலாம்.
இன்ட்ரா டே வணிகம்
ஆக இண்டிட்ராடே வர்த்தகர்கள் இனி 100% மார்ஜின் வைத்திருக்க வேண்டுமா? எனில் இல்லை. ஆரம்பத்தில் 1 லட்சம் மதிப்புள்ள வணிகத்தினை செய்ய உங்களுக்கு 25% தொகை மார்ஜின் ஆக இருந்தால் போதும் என்று கூறப்பட்டது. அதாவது 5000 ரூபாய் இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் அது பின்னர் 50% மற்றும் 75% என அதிகரிக்கப்பட்டு, செப்டம்பர் 1 முதல் 100% என்ற விகிதம் அமலுக்கு வரவிருக்கின்றது. அதாவது உங்களுக்கு 1 லட்சம் மதிப்பில் வர்த்தகம் செய்ய 20,000 ரூபாய் உங்களுக்கு தேவைப்படும்.
லீவரேஜ் எத்தனை முறை?
டிசம்பர் 2020 - பிப்ரவரி 2021 - அதிகபட்சம் 20 முறை எக்ஸ்போஸர்
மார்ச் 2021 - மே 2021 - அதிகபட்சம் 10 முறை எக்ஸ்போஸர்
ஜூன் 2021 - ஆகஸ்ட் 2021 - அதிகபட்சம் 7 முறை
செப்டம்பர் 2021 முதல் - அதிகபட்சம் 5 முறைகள் மட்டுமே
எஃப் & ஓ எக்ஸ்போஸர்
டிசம்பர் 2020 - பிப்ரவரி 2021 - அதிகபட்சம் 4 முறை
மார்ச் 2021 - மே 2021 - அதிகபட்சம் 2 முறை
ஜூன் 2021 - ஆகஸ்ட் 2021 - அதிகபட்சம் 1.3 முறை
செப்டம்பர் 2021 முதல் - 1 முறை மட்டுமே
தரகு நிறுவனங்கள் பாதிக்கும்
செபியின் இந்த விதிமுறைகள் எல்லா தரகு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக செபியின் இந்த விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் தரகு நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. செபியின் இந்த விதிமுறையால் தரகு நிறுவனங்களுக்கு வால்யூம் வெகுவாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் குறையும்.
வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு தான்.
வர்த்தகர்களை பொறுத்த வரையில் இனி லிமிட் அதிகம் கிடைக்காது என்பதால், அவர்களின் வர்த்தகம் நிலையானதாக இருக்கும். இதனால் வாடிக்கையாளர்கள் நீண்டகாலத்திற்கு வர்த்தகம் செய்ய முடியும். நஷ்டம் குறையும் என்கிறது. எனினும் பலரும் பங்கு வர்த்தகத்தில் வர்த்தகம் செய்ய, இந்த லீவரேஜினை சாதகமாக பயன்படுத்தி வந்த நிலையில், இனி அது குறையும். எனினும் பாதுகாப்பு என்பதால் இது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.