ஈரான் போர் காரணமாக அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகப்படியான பங்கு விற்பனை காரணமாக, இந்தியப் பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகின.
குறிப்பாக மதியம், முன்னணி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் வீழ்ச்சியுடன் வணிகமாகின. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து முதலீடுகளை வெளியேற்றிய வண்ணம் உள்ளனர். இதன் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வதாலும் பங்குச்சந்தை பலவீனமடைந்தது. சந்தை பலவீனமாகத் தொடங்கியபோதிலும், சென்செக்ஸ் 77,493.53 என்ற அதிகபட்ச புள்ளியை எட்டியது. பரந்த நிஃப்டி குறியீடும் குறைந்த அளவில் தொடங்கி 24,000 புள்ளிகளுக்குக் கீழே சென்று, 23,999.25 ஆக சரிந்தது. பின்னர் சற்றே மீண்டு, 24,181.80 என்ற அதிகபட்ச புள்ளியைத் தொட்டது.

மதியம் 1:50 மணியளவில், சென்செக்ஸ் 419.85 புள்ளிகள் சரிந்து 76,883.78 ஆகவும், நிஃப்டி 101.80 புள்ளிகள் சரிந்து 23,990.90 ஆகவும் வர்த்தகமானது. இன்றைய தினம் நிஃப்டி50 குறியீட்டில், ETERNAL, ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டர் குளோப் ஏவியேஷன் பங்குகள் 4% வரை சரிந்தன. அதேசமயத்தில், ஆயில் & நேச்சுரல் காஸ் கார்ப்பரேஷன் மற்றும் கோல் இந்தியா பங்குகள் 4% வரை உயர்ந்தன. ஒட்டுமொத்த சந்தையின் வீழ்ச்சிக்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருந்தன.
சமீபத்தில் தொடர்ந்து இரண்டு அமர்வுகளாக லாபமீட்டிய நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளில் லாப நோக்கு விற்பனை (profit booking) நடைபெற்றது. இது சந்தை சரிவுக்கு முக்கிய காரணம். நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் பெரிய இழப்புகளை சந்தித்தன. கடந்த திங்கள்கிழமை, தொழில்நுட்பப் பங்குகளின் உயர்வால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மூன்று நாட்கள் தொடர்ச்சியான சரிவுக்குப் பிறகு மீண்டிருந்தன.
கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதும் சந்தைக்கு அச்சுறுத்தலானது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.99% உயர்ந்து ஒரு பீப்பாய் $109.3 ஆக இருந்தது. அதிக கச்சா எண்ணெய் விலைகள் இந்தியாவின் இறக்குமதி செலவுகளை அதிகரிக்கச் செய்து, வர்த்தகப் பற்றாக்குறையை விரிவுபடுத்துகின்றன. மேலும், பணவீக்கத்தை அதிகரித்து, சந்தை மனநிலையைப் பாதிக்கின்றன.
ஆன்லைன் வர்த்தகம் மற்றும் வெல்த்-டெக் நிறுவனமான என்ரிச் மணியின் CEO பொன்முடி, "உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து ஒரு முக்கிய கவலையாக உள்ளன. ப்ரெண்ட் ஒரு பீப்பாய்க்கு $106-$110 வரம்பில் வர்த்தகம் ஆகி, பணவீக்க அழுத்தங்களைச் சேர்க்கின்றன. இது சந்தையின் உணர்வைப் பாதிக்கிறது “ என்றார். ஒட்டுமொத்தமாக, சந்தையின் மனநிலை பலவீனமாக உள்ளதுடன், பெரும்பாலும் வெளி காரணிகளால் உந்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) திங்கட்கிழமை ₹1,151.48 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது சந்தையில் பணப்புழக்கத்தை குறைத்து, பங்கு விலைகள் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. சர்வதேச முதலீட்டாளர்களால் தொடர்ந்து பணம் வெளியேற்றப்படுவது சந்தையின் சரிவுக்கு வலு சேர்த்தது.
ஆசியச் சந்தைகளில் ஜப்பானின் நிக்கி 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகிய குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாயின. அமெரிக்கச் சந்தைகளிலும் வால் ஸ்ட்ரீட் ஃபியூச்சர்ஸ் சிவப்பு நிறத்தில் இருந்தன. இது அமெரிக்கச் சந்தைகளின் பலவீனமான தொடக்கத்தைக் குறிக்கிறது. இதுவும் இந்தியச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
"உலகச் சந்தைகள் ஒரு கலவையான ஆனால் எச்சரிக்கையான நேர்மறையான தோற்றத்தை வழங்குகின்றன. எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் காம்போசிட் புதிய சாதனை உச்சங்களை எட்டியுள்ளன. இது அமெரிக்கப் பங்குகளின் அடிப்படைக் குணாதிசயத்தைப் பிரதிபலிக்கிறது. இருப்பினும், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் தீர்க்கப்படாத புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக உயர்வுக்கான உத்வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள புதிய வளர்ச்சிகள் கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் உலகளாவிய ஆபத்து உணர்வுகளை தொடர்ந்து பாதிக்கின்றன" என்று லைவ்லாங் வெல்த்தின் ஆராய்ச்சி ஆய்வாளரும் நிறுவனருமான ஹரிபிரசாத் கே விளக்கமளித்தார்.
நிஃப்டி குறியீட்டின் 'எக்ஸ்பைரி' நாளாக இருந்தது மற்றொரு காரணம். வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நிலைகளைச் சரிசெய்ததால், ஏற்ற இறக்கமான வர்த்தகம் காணப்பட்டது. புவிசார் அரசியல் கவலைகளும் சந்தையின் மனநிலையை அச்சுறுத்தின. அமெரிக்க அதிகாரி ஒருவர், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை நிறுத்தாமல், அதன் சமீபத்திய மோதல் தடுப்பு திட்டத்தை டொனால்ட் டிரம்ப் ஏற்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். மேலும், இராஜதந்திர உறவுகள் ரத்து செய்யப்பட்டது, ஒரு விரைவான தீர்வுக்கான நம்பிக்கையை மழுங்கடித்தது.
ரிசர்வ் வங்கியின் இறுதி சொத்து-வகைப்பாடு மற்றும் ஒதுக்கீட்டு விதிமுறைகள் ஏப்ரல் 1, 2027 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கான ஒதுக்கீட்டுத் தேவைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, வங்கி குறியீடுகள் 2% வரை சரிந்தன என்று ராய்ட்டர்ஸ் மற்றும் மேக்வாரி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் சந்தை வியூக நிபுணர் ஆனந்த் ஜேம்ஸ், நிஃப்டியின் பின்வாங்கல் 24,140 புள்ளிகளுக்கு அருகில் தடைபட்டது என்றார். "சமீபத்திய நேர்மறை இருந்தபோதிலும், இந்த குறியீடு இன்னும் கரடிப் போக்கு கட்டமைப்பிற்குள் இருக்கலாம். சுமார் 23,500 என்ற சரிவு நிலைகள் கவனத்தில் உள்ளன. 24,140 க்கு மேல் நிலையான நகர்வு 24,421-24,470 நோக்கி வழிவகுக்கும். இருப்பினும், 25,000-25,600 என்ற உயர் நிலைகளுக்கு மேலும் உறுதிப்படுத்தல் தேவைப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

