கொரோனா வைரஸ் பிரச்சனை, இந்திய பங்குச் சந்தைகளில், கடந்த 2020 பிப்ரவரி கடைசி வாரம் முதல், கடுமையாக எதிரொலிக்கத் தொடங்கியது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்தது. மறு பக்கம் 2020 மார்ச் கடைசி வார வாக்கில், ஒட்டு மொத்த இந்தியாவும் லாக் டவுன் செய்யப்பட்டது.
இப்படி கொரோனா பிரச்சனையால், உலகம் முழுக்க எல்லா நாட்டுப் பங்குச் சந்தைகளும், தாறுமாறாக சரியத் தொடங்கின. சென்செக்ஸ் அதிகபட்சமாக 25,650 புள்ளிகள் வரை சரிந்தது. இப்போது அந்த சரிவுகளில் இருந்து சிறப்பாக மீண்டு வருகிறது.
38,799 முதல் முறை
கடந்த மார்ச் 2020-ல், சுமாராக 25,650 புள்ளிகள் வரை தொட்டு வர்த்தகமான சென்செக்ஸ், தற்போது, 38,799 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. இப்படி சென்செக்ஸ், 38,799 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைவது, கொரோனா வைரஸால் ஏற்பட்ட சரிவுக்குப் பின் இதுவே முதல் முறை. இதற்கு முன், கடந்த 18 ஆகஸ்ட் 2020 அன்று 38,528 புள்ளிகளைத் தொட்டு சென்செக்ஸ் நிறைவடைந்தது. இது தான், கொரோனாவுக்குப் பிறகான உச்சபட்ச புள்ளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய & ஆசிய சந்தைகள் நிலை என்ன
24 ஆகஸ்ட் 2020 , லண்டனின் எஃப் டி எஸ் இ 1.92 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.30 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.42 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி தவிர மற்ற எல்லா ஆசிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 3,034 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,669 பங்குகள் விலை ஏற்றத்திலும், 1,193 பங்குகள் விலை இறக்கத்திலும், 172 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 218 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
பங்கு விலை விவரங்கள்
ஜி எண்டர்டெயின்மெண்ட், கோட்டக் மஹிந்திரா, இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. பவர் கிரிட் கார்ப்பரேஷன், அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ, டெக் மஹிந்திரா மஹிந்திரா & மஹிந்திரா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.