சென்செக்ஸ் மீண்டும் 2,000 புள்ளிகள் சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த சில தினங்களாகத் தான் பாடுபட்டு, அடி மீது அடி வைத்து 33,700 புள்ளிகளைத் தொட்டது சென்செக்ஸ்
அமெரிக்க சீன குழாய் அடிச் சண்டை, மோசமான மார்ச் 2020 காலாண்டு முடிவுகள், இந்தியாவில் நீட்டிக்கப்பட்ட லாக் டவுன், டாலர் பலம் அடைந்து வருவது... என பலப் பல காரணங்கள் ஒன்று சேர்ந்து இந்தியாவின் சென்செக்ஸை துவைத்து எடுத்து இருக்கின்றன.
இன்று பங்குச் சந்தை முடிவில் சென்செக்ஸின் நிலவரம் என்ன..? வாங்க பாப்போம்.
சென்செக்ஸ்
ஏப்ரல் 30, 2020 மாலை, 33,717 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 32,748 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. இது தான் சென்செக்ஸின் இன்றைய அதிகபட்ச புள்ளி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் வர்த்தக நேர முடிவில் 31,715 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்து இருக்கிறது. ஆக நேற்றைய குளோசிங்கில் இருந்து இன்றைய குளோசிங் புள்ளியை கணக்கிட்டால் 2,002 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு நிறைவடைந்து இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 02 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 28 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் 2,597 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 568 பங்குகள் ஏற்றத்திலும், 1,849 பங்குகள் இறக்கத்திலும், 180 பங்குகள் விலை மாற்றம் இன்றியும் வர்த்தகமாயின. இதில் 28 பங்குகள் 52 வார விலை உச்சத்தையும் தொட்டது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று மே 04, 2020 வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் லண்டனின் எஃப் டி எஸ் இ சந்தை 0.15 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 3.78 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 3.26 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசிய சந்தைகளிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான்.
பங்கு விலை நிலவரம்
சிப்லா, பார்தி ஏர்டெல், சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் எல்லாம் இழுத்துப் பிடித்து ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஐசிஐசிஐ பேங்க், ஹிண்டால்கோ, வேதாந்தா, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
டாலர்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, 75.80 ரூபாயைத் தொட்டு மீண்டும் பீதியைக் கிளப்பி இருக்கிறது. ரூபாய் மதிப்பு 76.91 ரூபாய் என்கிற வரலாற்று உச்சத்தை மீண்டும் தொடுமோ என்கிற பயமும் பங்குச் சந்தை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.