சர்வதேச அளவில் மேக்ரோ பொருளாதார செய்திகள் அத்தனை நன்றாக இல்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்பை சிறைக்கு அனுப்புவது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.08 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருவது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 65.27 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருவது என கொஞ்சம் இந்திய சந்தைகளுக்கு நெகட்டிவ் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இது போக தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் தவிர, மற்ற எல்லா ஆசிய பங்குச் சந்தைகளும், இன்று இறக்கத்திலோ அல்லது ஃப்ளாட்டாகவோ தான் வர்த்தகமாகி இருக்கின்றன.
அதோடு இந்தியப் பொருளாதாரம் குறித்த செய்திகளும் அத்தனை சிறப்பாக இல்லை. எனவே சந்தை ஃபண்டமெண்டல் செய்திகளை கண்டு கொள்ளாமல் ஏற்றம் கண்டு வருகிறது என்று தான் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே சென்செக்ஸ் எப்போது வேண்டுமானாலும் யூடேர்ன் எடுக்கலாம். எனவே முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் ஜாக்கிரதையாக வியாபாரத்தை மேற்கொள்ளவும்.
சந்தையில் இதே பாசிட்டிவ் செண்டிமெண்ட் நாளையும் தொடர்ந்தால்... 41,750 புள்ளிகள் முதல் ரெசிஸ்டென்ஸாகவும், 41,950 புள்ளிகளை இரண்டாவது ரெசிஸ்டென்ஸாகவும் வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை இறக்கம் காணத் தொடங்கினால் 41,000-த்தை முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 41,558 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,571 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,673 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இது சென்செக்ஸின் புதிய வரலாற்று உச்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 115 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 12,223 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,259 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,665 பங்குகளில் வர்த்தகமாயின. அதில் 1,251 பங்குகள் ஏற்றத்திலும், 1,241 பங்குகள் இறக்கத்திலும், 173 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,665 பங்குகளில் 61 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 125 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
யெஸ் பேங்க், ஈஷர் மோட்டார்ஸ், டி சி எஸ், பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. வேதாந்தா, க்ராசிம், சன் பார்மா, ஹெச் டி எஃப் சி, அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.