சென்செக்ஸ் இண்டெக்ஸ் கடந்த சில வர்த்தக நாட்களாக, மேல் நோக்கி வர்த்தகமானது. தினமும் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஆனால் இன்று, சென்செக்ஸ் திடீரென யூடேர்ன் எடுத்து, (1,066 புள்ளிகள்) முரட்டு சரிவில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில், அதிகபட்சமாக 41,048 புள்ளியைத் தொட்டது. இந்த உச்சப் புள்ளியில் இருந்து 1,320 புள்ளிகள் சரிந்து 39,728 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸ் வர்த்தகம்
நேற்றைய குளோசிங் புள்ளியான 40,794 புள்ளியில் இருந்து 1,066 புள்ளிகள் சரிந்து, 39,728 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இந்த சரிவினால் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு என்ன? எவ்வளவு சந்தை மதிப்பை இழந்து இருக்கிறார்கள்? என்பதைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
BSE-ல் ரூ 3.25 லட்சம் கோடி சந்தை மதிப்பு
நேற்று (14 அக் 2020, புதன்கிழமை) வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 160.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இன்று (15 அக் 2020) வர்த்தக நேரம் நிறைவடைந்த பின், அதே மும்பை பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 157.31 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டு இருக்கிறது. ஆக ஒரே நாளில் 3.25 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
1,066 புள்ளிகள் சென்செக்ஸ் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன?
1. ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி.
2. கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வேசின் மருந்துவ சோதனைகளில் ஏற்பட்டு இருக்கும் தடைகள்.
3. முதலீடுகளை விற்று வெளியேறும் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள்.
4. செம அடி வாங்கிய வங்கிப் பங்குகள் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்... போன்றவைகள் தான் சென்செக்ஸ் சரிவுக்கு முக்கிய காரணங்கள்.
மும்பை பங்குச் சந்தை நிலவரம் என்ன?
சென்செக்ஸின் 30 பங்குகளில் ஒரே ஒரு பங்கு மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமானது. மீதமுள்ள 29 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,790 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 816 பங்குகள் ஏற்றத்திலும், 1,823 பங்குகள் விலை இறக்கத்திலும், 151 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 97 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.