ஒரு காலத்தில் (2020 தொடக்கத்தில்) சென்செக்ஸ், 40,000 புள்ளிகளுக்கு மேல் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது.
ஆனால் இன்று 33,000 புள்ளிகளை கடந்து வந்ததற்கே முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் இனிப்பு எடுத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு கொரோனாவின் கோர தாண்டவம் நம்மை எல்லாம் கதற வைத்திருக்கிறது.
இன்று வர்த்தக நேர தொடக்கத்திலேயே, சென்செக்ஸ் 33,381 புள்ளிகளில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. இப்போது 33,500-ஐக் கடந்து சுமாராக 33,850 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கியமான 5 காரணங்களைத் தான், இங்கு பார்க்க இருக்கிறோம்.
உலக சந்தைகள்
நேற்று ஏப்ரல் 29, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 3.57 சதவிகிதம் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்று ஏப்ரல் 30, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 0.35 % இறக்கம் கண்டு இருக்கிறது. பிரான்ஸின் சி ஏ சி 0.11 % ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.12 % இறக்கம் கண்டு இருக்கிறது. இவை எல்லாமே இந்திய சந்தைகள் ஏற்றம் காண உதவிக் கொண்டு இருக்கிறது.
ஆசிய சந்தைகள்
சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 2.69 %
ஜப்பானின் நிக்கி 2.14 %
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் 2.19 %
ஹாங்காங்கின் ஹேங்செங் 0.28 %
தைவானின் தைவான் வெயிடெட் 2.04 %
தென் கொரியாவின் கோஸ்பி 0.70 %
தாய்லாந்தின் எஸ் இ டி காம்போஸைட் 1.03 %
இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 3.17 %
சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 1.33 % என நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதுவும் இந்திய சந்தைகளின் ஏற்றத்துக்கு வலு சேர்க்கிறது.
Remdesivir மருந்து
உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸுக்கு மருந்து கிடைக்காதா..? என ஏங்கிக் கொண்டிருந்த போது, Remdesivir என்கிற மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தாக அமையலாம் என்கிற செய்தி ஒட்டு மொத்த உலக பங்குச் சந்தைகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சந்தை சர சரவென ஏற்றம் காணத் தொடங்கிவிட்டது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி, தன் வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதமாகவே வைத்திருக்கிறது. எந்த மாற்றமும் செய்யவில்லை. ஃபெட் ரேட்டை, அப்படியே தொடர இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது. இன்னும் மோசமான காலம் வர இருக்கிறது. அப்போதும் ஃபெடரல் வங்கி உதவ தயாராக இருப்பதாகச் சொல்லி இருக்கிறது.
வியாபார தொடக்கம்
இந்தியாவில் வரும் மே 03, 2020 உடன் இரண்டாம் கட்ட லாக் டவுன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த லாக் டவுன் காலத்துக்குப் பின்பு, சில கட்டுப்பாடுகளுடன் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பினாலும் சென்செக்ஸ் ஏற்றம் கண்டு கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்.