கொரோனா வைரஸ் வந்ததில் இருந்து தினம் தோறும் மத்திய அரசு ஏதாவது புதிய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறது.
நேற்று மதியம் நிர்மலா சீதாராமன் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கான உதவித் திட்டங்களை அறிவித்தார். இன்று ஆர்பிஐ 0.75 % ரெப்போ ரேட் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்கள்.
இருப்பினும் சென்செக்ஸ் இந்த செய்திக்கு மசிந்ததாகத் தெரியவில்லை. சொல்லப் போனால் சரியத் தான் செய்து இருக்கிறது.
ஆர்பிஐ வட்டி விகிதம்
ஆர்பிஐ இன்று 0.75 % ரெப்போ ரேட்டைக் குறைத்தது, ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை 0.90 % குறைத்தது, கேஷ் ரிசர்வ் ரேஷியோவை 1.00 % குறைத்தது. 3 மாத இ எம் ஐ-களை ஒத்தி வைக்க ஆர்பிஐ அனுமதி கொடுத்து இருக்கிறது. இப்படி, இந்திய பொருளாதாரத்துக்கு தற்போது தேவையாக இருக்கும் நடவடிக்கைகளைத் தான் ஆர்பிஐ எடுத்து இருக்கிறது. ஆனால் சந்தை இதை வரவேற்கவில்லை.
பொருளாதார வளர்ச்சி
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக் கணிப்பு, இந்த மார்ச் 2020 காலாண்டில் 4.7 சதவிகிதமாக இருக்கலாம் எனக் கணித்து இருந்தார்கள். அதே போல இந்த 2019 - 20 நிதி ஆண்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக இருக்கலாம் எனக் கணித்து இருந்தார்கள்.
சரிவு
தற்போது இந்த இரண்டு பொருளாதார வளர்ச்சி கணிப்புகளுமே சிக்கலில் இருப்பதை மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸே ஒப்புக் கொண்டு இருக்கிறார். இந்த ஒரு செய்தி இந்திய பங்குச் சந்தைகளை செம அடி அடித்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் என்ன அடி அடிக்கப் போகிறதோ தெரியவில்லை.
சென்செக்ஸ்
நேற்று மாலை 29,946 புள்ளிகள் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 30,747 புள்ளிகளில் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதோடு தொடர்ந்து புதிய புதிய உச்சப் புள்ளிகளைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. தற்போது அதிகபட்சமாக 31,126 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது.
1780 புள்ளிகள்
இந்த அதிகபட்ச புள்ளியில் இருந்து 1,780 புள்ளிகள் சரிந்து 29,346 புள்ளிகளைத் தொட்டு சென்செக்ஸ் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பை பங்குச் சந்தையின் பெஞ்ச் மார்க் இண்டெக்ஸான சென்செக்ஸ் 29,845 புள்ளிகளில் 100 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடையுமா..?
நிஃப்டி
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி, நேற்று 8,641 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது, இன்று 8,949 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி அதிகபட்சமாக 9,038 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. தற்போது 8,671 புள்ளிகளில் 30 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது தேசிய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸான நிஃப்டி