உலக பொருளாதாரம் முன்னேற முடியாமல் தடுமாறுவது, ஆசிய சந்தைகள் எல்லாம் செமயாக அடி வாங்கி இருப்பது, இந்திய சந்தைகளை மேலே ஏற்றிக் கொண்டு செல்ல நல்ல செய்திகள் இல்லாமல் இருப்பது என எங்கு பார்த்தாலும் ஒரே ரத்தக் களரியாகத் தான் இருக்கிறது.
இதற்கு மத்தியில் சென்செக்ஸ் ஓரளவுக்கு இழுத்துப் பிடித்து 34,961 புள்ளிகளில் நிறைவடைந்தது தான் கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சு விட்டுக் கொள்ள முடிகிற ஒரே செய்தி.
சரி இன்றுச் சென்செக்ஸ் எப்படி வர்த்தகமானது? எந்த பங்குகள் விலை ஏறி வர்த்தகமாயின. எந்த ஐரோப்பிய சந்தைகள் எப்படி வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? வாருங்கள் ஒரு ரவுண்ட் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலை என்ன
நேற்று மாலை சென்செக்ஸ், 35,171 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 34,926 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் 34,662 புள்ளிகள் வரைத் தொட்டு பய முறுத்தியது. ஆனால் வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ், கொஞ்சம் ஏற்றம் கண்டு 34,961 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 209 புள்ளிகள் இறக்கம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 9 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,925 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,142 பங்குகள் ஏற்றத்திலும், 1,643 பங்குகள் இறக்கத்திலும், 140 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 125 பங்குகள் தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.
உலக பங்குச் சந்தைகள்
இன்று, ஜூன் 29, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 0.39 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.13 சதவிகிதமும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.35 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவில் சிங்கப்பூர் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. அதான், சென்செக்ஸில், இறக்கம் எதிரொலித்து இருக்கிறது போலிருக்கிறதே.
பங்கு விலை நிலவரம்
ஹெச் டி எஃப் சி பேங்க், பிரிட்டானியா, சிப்லா, ஹிந்துஸ்தான் யுனிலிவர், மஹிந்திரா & மஹிந்திரா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. கோல் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், ஹிண்டால்கோ, டெக் மஹிந்திரா, எஸ் பி ஐ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.