சீனா உடனான எல்லைப் பதற்றம், கொரோனா பிரச்சனை, அமெரிக்கா குடியேற்ற அலுவலகம் இந்தியா அதிகம் பயன்படுத்தும் விசாக்களை ரத்து செய்தது... போன்ற பல காரணங்களின் போதும் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், இப்போது திடீரென ஏற்றம் காண முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது.
சரிவு பெரிதாக இல்லை என்றாலும், சென்செக்ஸ் 35,000 புள்ளிகளை விட்டு கீழே இறங்கி வந்ததை, முதலீட்டாளர்கள் கொஞ்சம் வருத்தத்தோடு தான் பார்க்கிறார்கள்.
சரி இன்று சென்செக்ஸ் நிலவரம் என்ன? மற்ற நாட்டுப் பங்குச் சந்தைகள் என்ன ஆயின? எந்த பங்குகள் எல்லாம் இன்று நன்றாக விலை ஏற்றம் கண்டது? வாருங்கள் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலை என்ன
நேற்று மாலை சென்செக்ஸ், 34,868 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 34,525 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் 34,499 வரைத் தொட்டு லைட்டாக முதலீட்டாளர்கள் வயிற்றில் பகீர் கிளப்பியது. ஆனால் வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ், கொஞ்சம் ஏற்றம் கண்டு 34,842 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 26 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 12 பங்குகள் ஏற்றத்திலும், வெறும் 18 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,820 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,519 பங்குகள் ஏற்றத்திலும், 1,191 பங்குகள் இறக்கத்திலும், 110 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
உலக பங்குச் சந்தைகள்
நேற்று நாஸ்டாக் 2.19 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஜூன் 25, 2020 இன்று லண்டனின் எஃப் டி எஸ் இ 0.11 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.61 சதவிகிதமும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.38 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவில் தைவான் மற்றும் சீனா தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. இது கூட நம் இந்திய சந்தைகள் சரிய ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
பங்கு விலை நிலவரம்
ஐடிசி, கோட்டக் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஏஷியன் பெயிண்ட்ஸ், ஹிண்டால்கோ, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அதனி போர்ட்ஸ், பாரத் பெட்ரோலியம் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.