கடந்த 31 ஆகஸ்ட் 2020 (ஜிடிபி செண்டிமெண்ட்) அன்று கண்ட பெரிய சரிவுக்குப் பின், அடுத்தடுத்த நாட்களில் ஓரளவுக்கு சென்செக்ஸ் ஏற்றம் கண்டது.
நேற்று மாலை சென்செக்ஸ், 38,990 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில், சென்செக்ஸ் 38,299 புள்ளிகள் வரை சரிந்தது. இது 691 புள்ளிகள் வீழ்ச்சி. தற்போது 38,478 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நேற்று மாலை சென்செக்ஸ் நிறைவடைந்த 38,990 புள்ளிகளில் இருந்து, தற்போதைய 38,478 புள்ளிகளைக் கணக்கிட்டால் 512 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.
சரிவுக்கு காரணம் என்ன?
நேற்று அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 4.96 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. அதே போல, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.52 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.44 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.4 % இறக்கத்திலும் வர்த்தகமானது. இது போக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் சேவைத் துறையில் வீழ்ச்சி போன்றவைகளும் சென்செக்ஸ் சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
இழப்பு எவ்வளவு
நேற்று, மும்பை பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு (Market Capitalization) 156.86 லட்சம் கோடி ரூபாயாக, நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே, பி எஸ் இ-யின் சந்தை மதிப்பு 154.85 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறதாம். ஆக, முதலீட்டாளர்களுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு குறைந்து இருக்கிறது.
சென்செக்ஸ் 30-ல் பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் மாருதி சுசூகி, மஹிந்திரா & மஹிந்திரா, டி சி எஸ் போன்ற பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஐசிஐசிஐ பேங்க், ஹெச் டி எஃப் சி, ஆக்ஸிஸ் பேங்க், எஸ் பி ஐ, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
இண்டெக்ஸ்
இன்று ஆட்டோமொபைல், மீடியா தவிர, மற்ற எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி சேவைகள் போன்ற செக்டார்கள் 1.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.