பங்குச் சந்தையில் ஒரு பொதுவான விதி உண்டு. ஓரளவுக்கு நல்ல லாபம் வந்துவிட்டால், பேராசைப்படாமல், அப்போதே கொஞ்சம் விற்று லாபத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள்.
அது தான் இப்போது, சென்செக்ஸிl நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனாவால் பெரிய சரிவைக் கண்ட சென்செக்ஸ், ஏப்ரல், மே மாதங்களில் ஓரளவுக்கு நன்றாகவே ஏற்றம் கண்டது. ஜூனில் 34,000 புள்ளிகளுக்கு மேல் எல்லாம் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்த ஏற்றத்தில் லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், வந்த லாபத்தை வெளியே எடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
கொரோனா செய்தி
அது போக, கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அடிக்கத் தொடங்கி இருப்பதாக வெளியான செய்திகளும், சந்தையில் தன் வேலைகளைக் காட்டத் தொடங்கி இருக்கின்றன. இந்த கொரோனா இரண்டாம் அலை செய்தியால் சர்வதேச சந்தைகளும் அடி வாங்கிக் கொண்டு இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
உலக சந்தைகள்
இன்று ஜூன் 15, 2020 வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் லண்டனின் எஃப் டி எஸ் இ சந்தை 1.18 % இறக்கத்தில் வர்த்த்கமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி சந்தை 1.26 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 1.32 % இறக்கத்தில் வர்த்தகமாகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ரத்தக் களரியில் ஆசிய சந்தைகள்
ஆசியாவில் தப்பித் தவறி ஒரு சந்தை கூட ஏற்றத்தில் வர்த்தகமாகவில்லை. 0.34 - 4.76 சதவிகிதம் வரை பலமான சரிவுகளைச் சந்தித்து இருக்கிறது. அதிகபட்சமாக கொரியாவின் கோஸ்பி 4.76 % சரிந்து இருக்கிறது. குறைந்தபட்சமாக சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 0.34 % சரிந்து இருக்கிறது.
சென்செக்ஸ் நிலை என்ன
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ், 33,780 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 33,670 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் குறைந்தபட்ச புள்ளியாக 32,923 புள்ளிகள் வரைத் தொட்டது. ஆனால் மீண்டும் ஓரளவுக்கு ஏற்றம் கண்டு, 33,228 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 552 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சில பங்குகள்
மும்பை பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸான சென்செக்ஸ் 30-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், சன் பார்மா ஆகிய 3 பங்குகள் மட்டுமே 1 %-க்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது என்றால் சென்செக்ஸ் சந்தையின் நிலையைப் புரிந்து கொள்ள முடியும்.
பி எஸ் இ-யில் என்ன நிலை
சென்செக்ஸ் 30-ல் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 11 பங்குகள் 2.75 %-க்கு மேல் விலை சரிந்து இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகமான 2,743 பங்குகளில் 1,335 பங்குகள் ஏற்றத்திலும், 1,229 பங்குகள் இறக்கத்திலும், 179 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகி இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது கரடியின் காலம், எனவே வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் ஜாக்கிரதையாக வர்த்தகங்களை மேற்கொள்ள வேண்டும்.