கடந்த ஐந்து வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் தொடர்ந்து இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து வருவதை கவனித்து இருக்கலாம். இன்றும் அந்த சரிவு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நேற்று மாலை, சென்செக்ஸ் 37,668 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,282 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது.
அதன் பின் உச்சபட்சமாக 37,304 புள்ளிகள் வரை தான் அதிகரித்தது. தற்போது, நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 468 புள்ளிகள் சரிந்து 37,199 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸ் நிலவரம் என்ன? வெளிநாட்டுப் பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன? வாங்க பாப்போம்.
இண்டெக்ஸ்
இன்று எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக ரியாலிட்டி, ஆட்டோமொபைல், மீடியா, மெட்டல் பொதுத் துறை வங்கிகள் போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் இரண்டு சதவிகிதத்துக்கு மேல் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இது ஒட்டு மொத்த சென்செக்ஸ் இறக்கத்துக்கு காரணமாக இருக்கின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் ஒரே ஒரு பங்கு மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. மீதமுள்ள 29 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,059 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 405 பங்குகள் ஏற்றத்திலும், 1,582 பங்குகள் விலை இறக்கத்திலும், 72 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 51 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (24 செப்டம்பர் 2020) ஆசியாவில், எல்லா முக்கிய நாட்டுப் பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. தைவானின் தைவான் வெயிடெட், தென் கொரியாவின் கோஸ்பி போன்ற சந்தைகள் அதிகபட்சமாக 2 சதவிகிதத்துக்கு மேல் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்
நேற்று (23 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 1.20 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.62 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.39 % ஏற்றத்திலும் வர்த்தகமானது. நேற்று அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 3.02 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.