கொரோனா தொற்றும், கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்தும் மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்தியாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் B.1.1529 ரகக் கொரோனா வைரஸ் போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் பரவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இதன் பரவலைத் தடுக்க மத்திய அரசு இந்த 3 நாடுகளில் இருந்தும், 3 நாடுகள் வழியாக அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் தீவிர கண்காணிப்புச் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டால் இதுவரை ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி அனைத்தும் வீணாகி விடும்.
உலக நாடுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸ்-ல் இதுதான் மிகவும் அதிகப்படியான மியூடேஷன் கொண்ட வைரஸ் ஆக உள்ளது. புதிய வைரஸ் தொற்றும், மத்திய அரசின் அறிவிப்பும் மும்பை பங்குச்சந்தையில் பெரிய அளவில் பாதித்துள்ளது.
புதிய ரகக் கொரோனா வைரஸ்
உலக நாடுகளில் புதிதாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டும் அல்லாமல் உலக நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1000 புள்ளிகள் சரிந்தது.
1400 புள்ளிகள் வரை சரிவு
மேலும் முதலீட்டாளர்கள் பதற்றத்தில் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறும் காரணத்தால் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பார்மா துறை பங்குகளைத் தாண்டி அனைத்துத் துறை பங்குகளும் சரிவை எதிர்கொண்டு உள்ளது.
ப்ளூ சிப் பங்குகள்
இன்று மும்பை பங்குச்சந்தை புதிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவி வரும் காரணத்தால் உள்நாட்டு சந்தை முதல் வெளிநாட்டு சந்தை முதலீட்டாளர்கள் வரையில் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு வருகிறது. இதனால் ஸ்மால்கேப், லார்ஜ்கேப் என்ற வித்தியாசம் இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அனைத்து நிறுவனங்களும் சரிவை எதிர்கொண்டு வருகிறது.
மீண்டும் லாக்டவுன்
புதிய கொரோனா தொற்றுப் பரவி வரும் காரணத்தால் ஐரோப்பிய நாடுகள் கோவிட் 19 பூஸ்டர் வேக்சின் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஊரடங்கு விதிமுறைகளை இரவோடு இரவாக அதிகரித்துள்ளது.
ஸ்லோவாக்கியா இரண்டு வார லாக்டவுன்-ம், செக் குடியரசு மற்றும் ஜெர்மனி ஆகியவை வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்து உள்நுழையத் தடை விதித்துள்ளது.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்
ஏற்கனவே அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பணவீக்கம் அதிகரிப்பு, பணப்புழக்கம் குறைப்பு, பத்திர கொள்முதல் குறைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் இருந்து முதலீடுகளைத் திரும்பப் பெற்று வரும் நிலையில், தற்போது புதிய கொரோனா வைரஸ் பரவல் மூலம் அதிகப்படியான முதலீடுகள் வெளியேறி வருகிறது.