இப்படி ஒரே நாளில் கோடி கணக்கில் லாபம் பார்க்க முடியும் என்றால், அதற்கு பங்குச் சந்தை தவிர வேறு இடம் இருக்கிறதா என்ன..?
இன்று ஒரே நாளில் இந்திய பங்குச் சந்தைகள் பட்டாசாய் வெடித்து இருக்கிறது. காரணம் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் சூழல் பெரிய அளவில் சமாதானம் அடைந்து இருப்பது தான்.
இதை இந்திய சந்தைகள் மட்டும் இன்றி உலக சந்தைகளே வரவேற்று இருக்கின்றன. வாருங்கள் விவரமாகப் பார்ப்போம்.
கொட்டிக் கொடுத்த பங்குகள்
மும்பை பங்குச் சந்தையில் டாப் 500 பங்குகளில் ஸ்பைஸ் ஜெட், தீபக் ஃபெர்டிலைசர்ஸ், டெல்டா கார்ப்பரேஷன், பாம்பே டையிங், ஜிண்டால் சா லிமிடெட், தேஜாஸ் நெட்வொர்க்ஸ் லிமிடெட், ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்ற நிறுவனங்களின் பங்குகள், இன்று ஒரே நாளில் மட்டும் 7 சதவிகிதத்துக்கு மேல் விலை அதிகரித்து இருக்கின்றன.
பங்குகள் நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,780 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,823 பங்குகள் ஏற்றத்திலும், 749 பங்குகள் இறக்கத்திலும், 208 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,780 பங்குகளில் 80 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 85 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
2.25 லட்சம் கோடி
நேற்று வர்த்தகம் நிறைவு அடைந்த போது, மும்பை பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) 1,54,80,600.76 கோடி ரூபாய். ஆனால் இன்று வர்த்தக நேரத்துக்குப் பின் மும்பை பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 1,57,06,155.38 கோடி ரூபாய். ஆக இந்த இரண்டு நாட்களின் சந்தை மதிப்பை கழித்தால் 2.25 லட்சம் கோடி ரூபாய் வருகிறது.
யாருக்கு போனதோ
ஆக நேற்றைய குளோசிங் விலையில் பங்குகளை வாங்கி, இன்றைய குளோசிங் விலையில் விற்பனை செய்த, ஒட்டு மொத்த பங்குகளின் மதிப்பு 2.25 லட்சம் கோடி ரூபாய். எத்தனை முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் இந்த 2.25 லட்சம் கோடியில் பங்கு போட்டுக் கொண்டார்களோ தெரியவில்லை. இதற்கு மத்தியில் நேற்றைய குறைந்த விலைக்கு வாங்கி இன்றைய உச்ச விலைக்கு விற்றதை எல்லாம் கணக்கு செய்தால் இந்த 2.25 லட்சம் கோடி என்கிற லாபம் இன்னும் அதிகரிக்கும்.
இன்றைய நாள்
நேற்று மாலை சென்செக்ஸ் 40,817 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,216 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,452 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 634 புள்ளிகள் அதிகரித்து இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,153 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,215 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
லாபம் நட்டம்
பார்தி இன்ஃப்ராடெல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. டி சி எஸ், கோல் இந்தியா, ஹெச் சி எல் டெக், பிரிட்டானியா, என் டி பி சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
உலக சந்தைகள்
அமெரிக்க சந்தை ஜனவரி 08, 2020 அன்று 0.67 % ஏற்றத்தில் நிறைவடைந்து இருக்கிறது.
ஜனவரி 09, 2020 இன்றைய வர்த்தகத்தில், லண்டனின் எஃப் எஸ் இ 0.54%,பிரான்ஸின் சி ஏ சி -0.40%, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் -1.27% ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஐரோப்பிய சந்தைகளைத் தொடர்ந்து ஆசியச் சந்தைகளிலும் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ஆசியச் சந்தைகள்
சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி -0.02%
ஜப்பானின் நிக்கி 2.31%
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் 0.05%
ஹாங்காங்கின் ஹேங்செங் 1.68%
தைவான் நாட்டின் தைவான் வெயிட்டெட் 1.30%
தென் கொரியாவின் கோஸ்பி 1.63%
தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் 1.31%
இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 0.78%
சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 0.91%
என எல்லா ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகி இருக்கின்றன.
இண்டெக்ஸ்
இன்று நிஃப்டியில் ஐடி தவிர மற்ற அனைத்து துறைகளும் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோ 2.68 %, ரியாலிட்டி 2.73 %, பொதுத் துறை வங்கி 2.41 %, தனியார் வங்கி 2.24 % ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.