இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) குறித்த நெகட்டிவ் செய்திகள், இன்று சந்தையை கொஞ்சம் கீழே இறக்கி இருக்கின்றன. ஆனால் பங்கு சார்ந்த செய்திகளும் இன்று சந்தையில் கொஞ்சம் இருந்தன. எனவே சந்தை மேற்கொண்டு இறங்கிவிடுமோ என்கிற பயத்தில் வந்த லாபத்தை புக் செய்து, பங்குகளை விற்று இருக்கிறார்கள்.
ஒரு வேளை சந்தை நாளை ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால் வழக்கம் போல 40,500 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு 40,650-ஐ அடுத்த ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.
கடந்த வாரத்திலேயே, சென்செக்ஸ் டே சார்ட்டில் இந்த ஏற்ற டிரெண்டு முடிந்ததைக் குறிப்பிட்டு இருந்தோம். நவம்பர் 07 கேண்டில் சார்ட் ஒரு ஹேங்கிங் மேன் பேட்டனைக் காட்டுகிறது. அதோடு அதற்கு முந்தைய நவம்பர் 06 அன்றைய குளோசிங் புள்ளியை உடைத்துக் கொண்டு, அதன் ஓப்பனிங் புள்ளிகளைத் தொட்டு நவம்பர் 07 அன்று சந்தை வர்த்தகம் ஆகி இருந்தது. எனவே அடுத்து வரும் நாட்களில் சந்தை ஏற்றம் காண்பது கொஞ்சம் கடினம் தான் எனச் சொல்லி இருந்தோம்.
சொன்னது போலவே, சந்தை கடந்த நவம்பர் 08 முதல் இன்று வரை இறங்கிக் கொண்டு இருக்கிறது. இன்று சென்செக்ஸ் ஏற்றம் கண்டாலும் டிரெண்டை மாற்றும் விதத்தில் தன் முந்தைய நாளின் குளோசிங் புள்ளியை விட கூடுதலாக ஏற்றம் கண்டு நிறைவடைந்தாலும், சார்ட் பேட்டன் படிப் பார்த்தால், சந்தை இன்னும் இறக்க டிரெண்டில் இருப்பதாகவே தெரிகிறது. ஆனால் கடந்த அக்டோபர் 31, 2019 முதல் ஒரு முறை கூட சந்தை 40,125 புள்ளிகளுக்குக் கீழ் நிறைவடையவில்லை.
நாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் முன்பே சொன்னது போல 40,125 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 40,000 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு சந்தை இறங்காது என நம்புவோம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 40,356 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,431 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,284 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 72 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 11,915 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,894 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 1 புள்ளி ஏற்றம் கண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 15 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,771 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,154 ஏற்றத்திலும், 1,404 பங்குகள் இறக்கத்திலும், 213 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,771 பங்குகளில் 58 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 145 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், யூபிஎல், ஹிண்டால்கோ, பாரத் பெட்ரோலியம் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, பிரிட்டானியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.