கடந்த செப்டம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் சென்செக்ஸ் வான வேடிக்கை காட்டியது போல சுமார் 3,000 புள்ளிகள் அதிகரித்தது. அதற்கு இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியை குறைத்தது தான் காரணம் என நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதற்குப் பின் சொல்லி வைத்தாற் போல தொடர்ந்து சென்செக்ஸுக்கு சரிவு தான். செப்டம்பர் 24, 2019 முதல் அக்டோபர் 09, 2019 வரையான அனைத்து வர்த்தக நாட்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இரண்டு நாள் மட்டுமே சென்செக்ஸ் ஏற்றம் கண்டு இருக்கிறது. செப்டம்பர் 26, 2019 மற்றும் அக்டோபர் 09, 2019 தான் அந்த இரண்டு நாட்கள்.
இன்று சென்செக்ஸ் கண்டு கொண்டு இருக்கும் ஏற்றம் தன் 38,000 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸ் புள்ளியுடன் வாழ்வா சாவா போராட்டம் போல மோதிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸின் 30 நாள் மூவிங் ஆவரேஜ் 37,504 ஆக இருக்கிறது. அதே போல 50 நாள் மூவிங் ஆவரேஜ் 37,441 புள்ளியாக இருக்கிறது. சென்செக்ஸின் தற்போது தன் 150 நாள் மூவிங் ஆவரேஜ் புள்ளியான 38,200 புள்ளிகளுடன் மோதிக் கொண்டு இருக்கிறது. இந்த 38,200 புள்ளிகளைக் கடப்பதும் அத்தனை சுலபம் இல்லை என்பதை 30 நாள் மற்றும் 50 நாள் மூவிங் ஆவரேஜ் சொல்கிறது.
கடந்த திங்கட்கிழமை மாலை சென்செக்ஸ் 37,531 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 37,628 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஏற்றமும் காணத் தொடங்கிவிட்டது. அந்த ஏற்றம் இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்றைய நாளுக்கான அதிகபட்ச புள்ளியாக 37,957 லெவல்களைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. அதாவது நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து வர்த்தகமாகத் 426 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது.
தற்போது சென்செக்ஸில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் 30 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,450 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,094 பங்குகள் ஏற்றத்திலும், 1,190 பங்குகள் இறக்கத்திலும், 166 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன. மொத்தம் 2,467 பங்குகளில் 28 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 219 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
தற்போது நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஐடி, எஃப் எம் சி ஜி தவிர அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. வங்கி, பொதுத் துறை வங்கி, தனியார் வங்கிகள், அரசு வங்கி, போன்ற துறை இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி மொத்த சந்தையையும் மேலே ஏற்றிக் கொண்டு இருக்கின்றன.
ஏர்டெல், இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், க்ராசிம், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. யெஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, ஹெச் சி எல் டெக், ஹீரோ மோட்டோகார்ப், ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.