ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்பார்களே... அது சென்செக்ஸ்-க்கு பளிச்சென பொருந்துகிறது. கடந்த ஐந்து வர்த்தக நாட்களாகவே சென்செக்ஸ் தன் 41,750 புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகம் நிறைவடைந்து கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக, சென்செக்ஸ் ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் 41,932 மற்றும் 41,945 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதோடு சென்செக்ஸ் 42,000 புள்ளிகளைக் கூட தொட்டது ஆனால், 42,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடையவில்லை. ஆக சென்செக்ஸ், தன் 42,000 ரெசிஸ்டென்ஸைக் கடந்து செல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பதை தெளிவாகப் பார்க்க முடிந்தது.
இன்று காலையில் பங்குச் சந்தை செய்தியில் "கடந்த 16-01-2020 மற்றும் 17-01-2020 ஆகிய இரண்டு நாட்களுக்கான டே சார்ட்டைப் பார்த்தால் இரண்டு டோஜி கேண்டில்கள் உருவாகி இருக்கின்றன. இந்த டோஜி கேண்டில் உருவாகிறது என்றாலே அது டிரெண்டை மாற்றப் போகிறது என புரிந்து கொள்ளலாம். இரண்டு டோஜி கேண்டிலுக்குப் பின் ஒரு பெரிய பியர் கேண்டில் (சந்தை இறக்கம்) உருவாகி இருப்பதால், சந்தை இறங்கத் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. இன்றைக்கு சென்செக்ஸ் குறைந்தபட்சம் 41,930-க்கு மேல் நிறைவடைந்தால், சென்செக்ஸ் இன்னும் ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் 41,775 புள்ளிகளுக்குக் கீழ் நிறைவடைந்தால், சென்செக்ஸ் இறங்கத் தொடங்கிவிட்டது எனச் சொல்ல முடியும். எனவே வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் உஷாராக வியாபாரத்தை மேற்கொள்ளவும்" எனச் சொல்லி இருந்தோம்.
நாம் சொன்ன 41,775 புள்ளிகளை விட படு பயங்கரமாக சரிந்து 41,528 புள்ளியில் நிறைவடைந்து இருக்கிறது. சுமாராக 400 புள்ளிகள் சரிந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சென்செக்ஸில் இறக்க டிரெண்ட் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 41,945 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 42,263 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் அதிகபட்சமாக 42,273 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் அடுத்த அரை மணி நேரத்துக்குள், சென்செக்ஸ் இறக்கம் காணத் தொடங்கிவிட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 41,528 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,430 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,224 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,712 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 954 பங்குகள் ஏற்றத்திலும், 1,575 பங்குகள் இறக்கத்திலும், 183 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,712 பங்குகளில் 101 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 79 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
பவர் கிரிட் கார்ப், பார்தி ஏர்டெல், பார்ஹி இன்ஃப்ராடெல், கெயில், ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. கோட்டக் மஹிந்திரா, ஐ ஓ சி, ஜி எண்டர்டெயின்மெண்ட், கோல் இந்தியா, ரிலையன்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.