இன்று காலை சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தன் வாழ் நாள் உச்சமான 42,273 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் இந்த ஏற்றம் நிலைக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களிலேயே இறக்கம் காணத் தொடங்கிவிட்டது.
இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக 41,708 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு இருக்கிறது சென்செக்ஸ். இந்த நேரத்தில் தான், சென்செக்ஸில் இறக்கம் தொடங்கிவிட்டதா..? எனவும் கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. காரணம் அதன் டெக்னிக்கல் சார்ட். சென்செக்ஸின் ஒரு நாள் டெக்னிக்கல் சார்ட்டில் மதியம் 12 மணி வரையான நிலவரத்தைப் பார்த்தால் அந்த இறக்க டிரெண்ட் கிட்டத்தட்ட உறுதியாகிறது.
கடந்த 16-01-2020 மற்றும் 17-01-2020 ஆகிய இரண்டு நாட்களுக்கான டே சார்ட்டைப் பார்த்தால் இரண்டு டோஜி கேண்டில்கள் உருவாகி இருக்கின்றன. இந்த டோஜி கேண்டில் உருவாகிறது என்றாலே அது டிரெண்டை மாற்றப் போகிறது என புரிந்து கொள்ளலாம். இரண்டு டோஜி கேண்டிலுக்குப் பின் ஒரு பெரிய பியர் கேண்டில் (சந்தை இறக்கம்) உருவாகி இருப்பதால், சந்தை இறங்கத் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது.
இன்றைக்கு சென்செக்ஸ் குறைந்தபட்சம் 41,930-க்கு மேல் நிறைவடைந்தால், சென்செக்ஸ் இன்னும் ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் 41,775 புள்ளிகளுக்குக் கீழ் நிறைவடைந்தால், சென்செக்ஸ் இறங்கத் தொடங்கிவிட்டது எனச் சொல்ல முடியும். எனவே வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் உஷாராக வியாபாரத்தை மேற்கொள்ளவும்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 41,945 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 42,263 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் அதிகபட்சமாக 42,273 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் அடுத்த அரை மணி நேரத்துக்குள், சென்செக்ஸ் இறக்கம் காணத் தொடங்கிவிட்டது. தற்போது சுமாராக 41,765 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,430 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 12,295 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,399 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 913 ஏற்றத்திலும், 1,315 பங்குகள் இறக்கத்திலும், 142 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 2,399 பங்குகளில் 143 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 172 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பார்தி இன்ஃப்ராடெல், பவர் கிரிட் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஐசிஐசிஐ பேங்க், ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஐ ஓ சி, ஜி எண்டர்டெயின்மெண்ட், அதானி போர்ட்ஸ், டி சி எஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 65.63 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.05 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.