இதுவரை வெளியான நுகர்வோர் பணவீக்கக் குறியீடு (CPI), மொத்த விலைக் குறியீடு (WPI) மற்றும் இந்திய தொழில் துறை உற்பத்தியைப் பிரதிபலிக்கும் ஐஐபி என எல்லா தரவுகளும் இந்தியப் பொருளாதார தவங்கிக் கொண்டிருப்பதாகவே சொல்கிறது. இருப்பினும் சந்தை ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது. சந்தையில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் செண்டிமெண்ட் பாசிட்டிவாக இருப்பதாகவே தெரிகிறது. விளைவு சென்செக்ஸ் புதிய உச்சங்களைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இதுவரை ஃபண்டமெண்டல் அடிப்படையில் சென்செக்ஸ் இறக்கம் காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நாம் சொன்னவைகளை எல்லாம் பொய்யாக்கி சென்செக்ஸ் ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது. இன்று புதிய உச்சத்திலேயே நிறைவடைந்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.
இனியும் சென்செக்ஸை பின்னுக்கு இழுக்கும் ரீதியிலான ஃபண்டமெண்டல் செய்திகள் வந்தாலும் சந்தை, அந்த செய்திகளை கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. எனவே புதிய உச்சத்தில் இன்று வர்த்தகம் நிறைவடையும் என எதிர்பார்க்கலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 40,938 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,052 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,292 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய உச்சப் புள்ளி 350 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 12,082 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,153 எனும் உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,350 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 1,245 பங்குகள் ஏற்றத்திலும், 948 பங்குகள் இறக்கத்திலும், 157 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன. 2,350 பங்குகளில் 30 பங்குகளின் விலை 30 வார அதிகத்திலும், 92 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
டாடா ஸ்டீல், வேதாந்தா, ஹிண்டால்கோ, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. கெயில், சன் பார்மா, பார்தி இன்ஃப்ராடெல், என் டி பி சி, யூ பி எல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.