ஆகஸ்ட் 2020 மாதத்தின் முதல் வாரம் 36,939 புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இந்த அகஸ்ட் 2020 மாதத்தில் முதல் வாரத்தின் கடைசி நாளான இன்று சென்செக்ஸ் 38,040 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
ஆக சென்செக்ஸ் மீண்டும் ஏற்றப் பாதைக்கு வந்து இருப்பதாகத் தெரிகிறது. சென்செக்ஸ் 38,617 புள்ளிகள் தான் கொரோனாவுக்குப் பிறகான உச்சப் புள்ளியாக இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏஷியன் பெயிண்ட்ஸ்
சமீபத்தில் தான் ஏஷியன் பெயிண்ட்ஸ் கம்பெனி, தன்னுடைய உற்பத்தி கெபாசிட்டியில் 70 % வரை செயல்படுவதாகவும், டயர் 2, 3, 4 நகரங்களில் தங்களின் வியாபாரம் மேம்பட்டு வருவதாகவும் சொல்லி இருந்தது. அந்த செய்திகள் எல்லாம் தற்போது மெல்ல பங்கு விலையில் பிரதிபலிக்கத் தொடங்கி இருக்கிறது. இன்று ஒரே நாளில் ஏஷியன் பெயிண்ட்ஸ் 4.6 % விலை ஏற்றம் கண்டு 1,807 ரூபாயில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
பி ஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,853 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,664 பங்குகள் ஏற்றத்திலும், 1,036 பங்குகள் இறக்கத்திலும், 153 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 189 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
ஏஷியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், யூ பி எல், இண்டஸ் இண்ட், பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. டைடன் கம்பெனி, ஹெச் சி எல் டெக், இன்ஃபோசிஸ், மஹிந்திரா & மஹிந்திரா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
உலக பங்குச் சந்தைகள்
06 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 1.0 % ஏற்றத்தில் வர்த்தகமானது. 07 ஆகஸ்ட், 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.04 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.28 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.10 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.