இந்த மார்ச் 2020-ல் மட்டும் சென்செக்ஸ் சுமாராக 4 முறை வரலாறு காணாத பெரிய சரிவுகளைக் கண்டு இருக்கிறது.
இரண்டு முறை இந்திய பங்குச் சந்தைகள் 10 சதவிகிதம் சரிந்ததால், பங்குச் சந்தைகளில் 45 நிமிடம் வர்த்தகம் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அவ்வளவு ஏன் கடந்த மார்ச் 23, 2020 அன்று கூட சென்செக்ஸ் ஒரே நாளில் 3,934 புள்ளிகள் சரிந்து மிகப் பெரிய வரலாறு காணாத சரிவைக் கண்டது குறிப்பிடத்தக்கது.
என்ன நடக்குது
இப்போது வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.அதே போல உலக வர்த்தகமும் வளரவில்லை, கம்பெனிகளின் வருமானங்களும் அதிகரிக்க வாய்ப்பில்லை, ஏற்றுமதி இறக்குமதி பெரிய அளவில் தடைபட்டு இருக்கின்றன.
இன்னும் இருக்கு
இது போக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் 76 ரூபாய்க்கு மேல் தான் இருக்கிறது. இருப்பினும் சென்செக்ஸ் ஏற்றம் காண்கிறது. எப்படி என்று தான் தெரியவில்லை. லாஜிக்காகப் பார்த்தால் இப்போது கூட சந்தை இறக்கம் காணவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
சென்செக்ஸ் ஏற்றம் இறக்கம்
நேற்று மாலை, 26,674 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 26,499 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதிகபட்சமாக 28,331 புள்ளிகளைத் தொட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆக நேற்றைய குளோசிங்கில் இருந்து இன்றைய அதிகபட்ச புள்ளியான 28,331 புள்ளிகளை கணக்கிட்டால் சுமார் 1,650 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க & ஐரோப்பிய சந்தைகள்
நேற்று மார்ச் 24 அமெரிக்காவின் நாஸ்டாக் 8.12 % ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று மார்ச் 25, 2020-ல் லண்டனின் எஃப் டி எஸ் இ 1.63 % ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல பிரான்சின் சி ஏ சி 2.36 % மற்றும் ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 2.5 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று மார்ச் 25, 2020, இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர, மற்ற ஆசியாவின் அனைத்து சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி 8.04 % அதிகரித்து இருக்கிறது. குறைந்தபட்ச ஏற்றம் என்றால் சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 2.17 % ஏற்றம் கண்டு இருக்கிறது.
30 பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,153 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,037 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 970 பங்குகள் இறக்கத்திலும், 146 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பங்கு விலை விவரம்
ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ், கோட்டக் மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. யெஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஓ என் ஜி சி, கோல் இந்தியா, ஐ டி சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
செண்டிமெண்ட் மாறிவிட்டதா
சர்வதேச சந்தைகள் எல்லாம் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது மட்டுமே மிகப் பெரிய பாசிட்டிவ் செய்தி. இந்த ஒரு செய்திக்காக, இந்திய சந்தைகளில் முதலீடு செய்து இருப்பவர்கள் அதிக விலை கொடுத்து பங்குகளை வாங்குகிறார்களா..? சந்தையில் முதலீட்டாளர்கள் செண்டிமெண்ட் மாறிவிட்டதா என்பது தான் ஒரே கேள்வியாக இருக்கிறது.
இரண்டாவது நாள்
ஒரு வேளை இன்றும் சென்செக்ஸ், ஏற்றத்தில் நிறைவடைந்தால் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். சந்தையில் வர்த்தகம் முடிய சுமாராக இன்னும் சுமாராக 90 நிமிடங்கள் இருக்கின்றன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். எனவே எதற்கும் உஷாராக இருப்பது நல்லது.