மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு திடீரென பெட்ரோல் டீசல் மீதான வரியினை குறைத்துள்ளது. இது தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் மீண்டும் மந்த நிலைக்கு செல்லலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வந்தனர்.
அது மட்டும் அல்ல, இரும்பு மற்றும் எஃகு பொருட்களுக்கான சுங்க வரியை குறைப்பது தொடர்பாக அளவீடும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பல மூலதன பொருள்களுக்கு சுங்கவரி குறைக்கப்படும் எனவும் , எஃகு பொருள்களுக்கான மூலப்பொருட்களுக்கு ஏற்றுமதி வரி உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீல் பங்குகள் சரிவு
இதற்கிடையில் ஸ்டீல் பங்குகள் விலை இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இரும்பு தாதுக்கள் மற்றும் துகள்களுக்கு அதிக ஏற்றுமதி வரியினை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இரும்புத் தாதுக்களுக்கான ஏற்றுமதி வரி விகிதமானது 30 சதவீதத்தில் இருந்து 50% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் சப்ளை அதிகரிக்கலாம்
மேலும் ஹாட் ரோல்ட் மற்றும் கோடு ரோல்டு எஃகு பொருட்களுக்கு முன்னதாக 15% வரி விகிதத்தினை அரசு விதித்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பிசிஐ மற்றும் நிலக்கரி, குக்கிங் நிலக்கரிக்கு வரியை குறைத்துள்ளது.
அரசின் இந்த ஏற்றுமதி வரி அதிகரிப்பின் காரணமாக உள்நாட்டில் சப்ளை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலையில் கீழ் நோக்கிய அழுத்தம் இருக்கலாம் என்று ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் குணால் மோதிஷா தெரிவித்துள்ளார்.
20% வரை வீழ்ச்சி கண்ட பங்குகள்
டாடா ஸ்டீலின் பங்கு விலையானது 12.63% குறைந்து, 1022.85 ரூபாயாக வர்த்தகம். ஜிண்டால் ஸ்டீல் & பவர் பங்கு விலையானது 13% குறைந்து, 478.90 ரூபாயாக வர்த்தகம். ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (SAIL) பங்கு விலையானது 13% குறைந்து, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் பங்கு விலையானது 11% குறைந்தும், கோதாவரி பவர் & இஸ்பாட் பங்கு விலையானது 20% குறைந்து, 311.70 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
மார்ஜின் பாதிக்கலாம்
அரசின் இந்த அறிவிப்பினால் நிறுவனங்களின் மார்ஜின் விகிதம் பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்றுமதியினை பாதிக்கலாம். இது நிறுவனங்களுக்கு மேற்கொண்டு தலைவலியினை கொடுக்கலாம். இதற்கிடையில் தான் மேற்கண்ட சில பங்குகள் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன.
பங்கு விலை குறையலாம்
இதற்கிடையில் சர்வதேச தரகு நிறுவனம் டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், JSPL உள்ளிட்ட பங்குகள் சரிவினைக் காணலாம் என மதிப்பிட்டுள்ளது. இது மேற்கொண்டு பங்குகள் விலை குறைய காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.