கடந்த 2012-ம் ஆண்டில் டாடா குழுமத்தின் முகமாகப் பார்க்கப்பட்ட ரத்தன் டாடா, தன் அன்றாட பணிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ரத்தன் டாடா ஓய்வு பெறும் போது, யார் அவருடைய தலைவர் பதவியை நிரப்புவார்கள் என்கிற விவாதம் தொடர்ந்து நடந்தது. அந்த விவாதத்துக்கு அமைதியாக முற்றுப் புள்ளி வைத்தவர் சைரஸ் மிஸ்த்ரி.
கடந்த 2012 முதல் அக்டோபர் 2016 வரை, சைரஸ் மிஸ்த்ரி, இந்தியாவின் மிகப் பெரிய வியாபார சாம்ராஜ்யங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் ஆறாவது தலைவராக பதவி வகித்தார். டாடா குழுமத்தில் ஏற்பட்ட பல்வேறு கருத்து முரண்பாடுகள் காரணமாக, கடந்த அக்டோபர் 2016-ல் சைரஸ் மிஸ்த்ரியை பதவியில் இருந்து நீக்கியது டாடா குழுமத்தின் இயக்குநர்கள் குழு.
தன்னை பதவியில் இருந்து நீக்கியது தவறு என தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் போராடி, தீர்ப்பையும் தனக்கு சாதகமாக வாங்கி இருக்கிறார் சைரஸ் மிஸ்த்ரி. இப்போது என் சந்திரசேகரனை டாடா குழுமத்தின் தலைவராக நியமித்தது சட்ட விரோதம் எனவும் தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் சொல்லி இருக்கிறது.
இந்த செய்தி வெளியான பின் டாடா குழுமத்தின் நிறுவனங்களான
டாடா கம்யூனிகேஷன்ஸ் +2.10 %
டாடா எலிக்ஸி +1.41 %
டாடா ஸ்டீல் +0.71 %
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் +0.08 %
டாடா குளோபல் பிவரேஜஸ் -3.66 %
டாடா மோட்டார்ஸ் -2.80 %
டாடா கெமிக்கல்ஸ் -1.93 %
டாடா பவர் -1.43 %
டாடா காபி -3.62 %
என சில நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தும், சில நிறுவன பங்குகளின் விலை இறக்கம் கண்டும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
உண்மையாகவே, சைரஸ் மிஸ்த்ரியை, டாடா நிறுவனங்களின் பங்குதாரர்கள், வரவேற்கிறார்களா அல்லது முகம் சுளிக்கிறார்களா..? என்பதை நாளை வர்த்தகத்தில் தான் பார்க்க முடியும். எனவே மக்களே.. நாளை வர்த்தக நேரத்தில், டாடா நிறுவனங்களில் முதலீடு செய்யும் போது மிகவும் ஜாக்கிரதையாக முதலீடு செய்யவும்.