டாடா மோட்டார்ஸின் பங்கு விலையானது 11 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
அதிலும் கடந்த புதன்கிழமையன்று சந்தையில் டாடா மோட்டார்ஸின் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 6.43% வீழ்ச்சி கண்டு 99 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே கடந்த செவ்வாய்கிழமையன்று 105.80 ரூபாயாக முடிவடைந்திருந்த நிலையில், நேற்று பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது.
விற்பனை வீழ்ச்சி
சீனாவில் நிலவி வரும் மந்தமான நிலை காரணமாக அங்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனையானது மிகவும் வீழ்ச்சி கண்டது என்றே கூறலாம். இதன் காரணமாக பலவீனமான சந்தைக்கு மத்தியில் கடந்த புதன்கிழமையன்று 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இரட்டை இலக்கில் அதன் பங்கு விலையானது வீழ்ச்சி கண்டுள்ளது.
தேவை குறையலாம்
மேலும் வளர்ந்து வரும் கொரோனா அச்சங்களுக்கு மத்தியில் மேலும் பலவீனமான தேவையினை இது கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதன் விற்பனை தொடர்ந்து வீழ்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மத்தியில் முதலீட்டாளர்கள் மத்தியில் பலவீனமான உணர்வுகளே நிலவி வருகின்றன. இதன் காரணமாக பங்கு விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
பங்கு விலை
கடந்த ஆகஸ்ட் 2009 அன்று டாடா மோட்டார்ஸின் பங்கு விலையானது 96.90 ரூபாயாக முடிவடைந்த நிலையில், புதன் கிழமையன்று 97.75 ரூபாயாக குறைந்தது. மேலும் இதன் சந்தை மூலதனமானது 35,615 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. குறிப்பாக புதன்கிழமை மட்டும் பிஎஸ்இ-யில் 57.43 லட்சம் பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு 58.58 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
படு வீழ்ச்சி
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த பங்கு 45% வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 46% வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவற்றின் மத்தியில் இந்த பங்கு 41% வீழ்ச்சியை கண்டுள்ளது. நாளுக்கு நாள் உலகெங்கிலும் இருந்து அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் விற்பனையில் மந்தம் நீடிக்கலாம் என்ற எண்ணமும் நிலவி வருகிறது.
சென்செக்ஸூம் வீழ்ச்சி
இதன் காரணமாக பிப்ரவரி 12 அன்று 41,565 ஆக இருந்த சென்செக்ஸ் அதன் பின்னர் 5,868 புள்ளிகளை இழந்துள்ளது. அதன் பின்னர் புதன்கிழமையன்று 35,697 ஆக முடிவடைந்துள்ளது. இதே போல நிஃப்டியும் பிப்ரவரி 12 அன்று 12,201 ஆக இருந்த நிலையில், புதன் கிழமையன்று 10,458 ஆகவும் முடிவடைந்துள்ளது. இது கிட்டதட்ட 1,743 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது.
சீனாவில் விற்பனை பலமான வீழ்ச்சி
சீனாவில் மட்டும் டாடா மோட்டார்ஸ் கடந்த பிப்ரவரியில் 85% விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய கார் சந்தையான சீனாவின் முடக்கமே இத்தகைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும் சீனாவில் இன்று வரையிலும் கூட அங்கு நிலைமை சீரமைந்ததாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆக இன்னும் கூட அங்கு விற்பனை வீழ்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மீள்ச்சி இல்லை
மேலும் சீனாவின் முடங்கி போயுள்ள தொழிற்சாலைகள், தற்போது வரை சில இடங்களில மீண்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் மற்ற நாடுகளுக்கு தேவையான ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் கிடைக்காமையால் உற்பத்தியும் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவும் பங்கு வீழ்ச்சிக்கு முக்கிய பங்காக உள்ளது. எனினும் நிலைமை சீரமைந்தாலும் உற்பத்தி, விற்பனை சீரடைய சிறிது காலம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
சீனா முக்கிய பங்கு
டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் லேண்ட் ரோவரின் விற்பனையானது ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சராசரியாக 25% வளர்ச்சி கண்டுள்ளது. சொல்லப்போனால் ஜனவரியில் கூட முதல் மூன்று வாரத்தில் நல்ல வளர்ச்சியைத் தான் கண்டுள்ளன. JLR உலகளாவிய விற்பனையில் கிட்டதட்ட கால் பங்கினை சீனா கொண்டுள்ளது. இது டாடா மோட்டார்ஸின் ஆண்டு வருவாய் சுமார் 41 பில்லியன் டாலர்களில் கிட்டதட்ட 73% ஆகும்.
விற்பனை மேலும் பாதிக்கலாம்
இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் JLR விற்பனை மேலும் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் டாடா மோட்டார்ஸ் இந்தியாவிலும் வீழ்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் டாடா குழுமத்தின் ஆட்டோபிரிவு கடந்த மாதத்தில் விற்பனையில் 31% வீழ்ச்சி கண்டு 12,430 ஆக இருந்தது. இது 2019 பிப்ரவரியில் 18,110 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது கூட வீழ்ச்சி தான்
அதிலும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த ஆண்டு ஜனவரியில் நெக்ஸான், டியாகோ, டைகோரின் உள்ளிட்ட பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப புதிய வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட விற்பனையிலும் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரவிருக்கும் காலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் நிச்சயம் விற்பனை வீழ்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது. இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ இந்த கொரோனா.