பொதுப் பங்கு வெளியீடு என்றாலே பேடிஎம் வெளியீட்டுக்கு பின்னர் முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர் எனலாம். குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள் சற்றே கவனமுடனே வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளனர் எனலாம்.
அதிலும் இன்று இந்திய பங்கு சந்தையானது புதிய வகை கொரோனா பரவலுக்கு மத்தியில், பலத்த சரிவினைக் கண்டுள்ளது.
இது மேற்கொண்டு மீண்டும் பலத்த கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக இன்று சந்தைகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.
தேகா இண்டஸ்ட்ரீஸ் ஐபிஓ
பொதுவாக பொதுப் பங்கு வெளீயீடு என்றாலே சில்லறை முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு எனலாம். ஆனால் பேடிஎம்மின் வீழ்ச்சிக்கு பிறகு சற்றே சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் தேகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஐபிஓ செய்யவுள்ளது. இது நிச்சயம் முதலீட்டாளர்கள் மத்தியில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது வெளியீடு?
சுரங்கத் தொழிலுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தேகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், டிசம்பர் 1 அன்று அதன் பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இதே டிசம்பர் 3 அன்று பங்கு வெளியீடு முடிவடையவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் 619.22 கோடி ரூபாய் நிதியினை திரட்டவுள்ளது.
பங்கு விலை நிர்ணயம்
இந்த பொது பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலையாக 443 - 453 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டில் 1,36,69,478 கோடி பங்குகளை விற்பனை செய்யவுள்ளது. இதில் புதிய வெளியீடு என்பது எதுவும் கிடையாது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் பங்கினை வைத்துள்ள பங்குதாரர்கள் மற்றும் புரோமோட்டார்களிடம் உள்ள பங்கினை தான் விற்பனை செய்யப்படவுள்ளது.
லாட் சைஸ் எவ்வளவு
இந்த பங்கு வெளியீட்டில் 33 பங்குகள் ஒரு லாட் ஆகும். ஆக நீங்கள் ஒரு லாட் வாங்க வேண்டுமெனில் 14,949 ரூபாய் முதலீடு செய்ய வேண்டிருக்கும்.
அதே போல ஒருவர் அதிகபட்சமாக 13 லாட்களை அதிகபட்சம் வாங்கிக் கொள்ளலாம்.
பட்டியல் எப்போது?
இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது டிசம்பர் 13 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், சுரங்கத்திற்கு தேவையான பொருட்களை உலகளாவிய அளவில் விரிவாக்கம் செய்ய இந்த பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.