எல்லோரும் பேராசைப்படும் போது கவனமாக இருக்க வேண்டும். எல்லோரும் பயப்படும்போது பேராசைப் பட வேண்டும்.( Be Fearful When Others Are Greedy and Greedy When Others Are Fearful) என்பது பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட்டின் வரிகள்..
இதன் அர்த்தம் எல்லோரும் பேராசைப்படும் போது, எதை பற்றியும் கவலைப்படாமல் அனைவரும் பங்குகளை வாங்குவார்கள். ஒரு பங்கை அதற்கு உரிய விலையை விட மிக அதிக விலை கொடுத்து வாங்குவார்கள்.
ஏனெனில் பங்கின் விலை அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் தங்களின் முதலீட்டை குறுகிய காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம் என பேராசை. எனவே, அந்த குறிப்பிட்ட பங்கு உயர்ந்து கொண்டே போகும் என்ற ஆசையில், அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் என எதை பற்றியும் கவலைப் படாமல் வாங்கி விடுவார்கள்.
பங்கினை வாங்க சரியான நேரம்
உதாரணத்திற்கு ஒரு டேட்டா ஒன்று சாதகமாக வெளியானால் பங்குகள் விலை அதிகரிக்கும் என்ற ஊகத்தில் அனைவரும் வாங்குவார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த டேட்டா சந்தைக்கு எதிர்மாறாக வந்தால், பங்குகள் சந்தையில் மடமடவென சரிய ஆரம்பித்து விடும். அந்த நேரத்தில் அப்படி தேவையற்ற பயத்தினால், விலை மள மளவென சரியும் நேரம், நல்ல பங்குககளும் அந்த நேரத்தில் சரியலாம்.
இது தான் காரணம்
ஏனென்றால் நிறுவனத்தின் மோசமான செயல்பாடு காரணமாக விலை சரியவில்லை, வேறு காரணங்களால் விலை வீழ்ச்சி கண்டது. இது ஒரு தற்போதைய நிகழ்வு. இதிலிருந்து பங்கின் விலை கண்டிப்பாக மீண்டு வரும், ஏனென்றால், அடுத்த காலாண்டில் நிறுவனத்தின் லாப கணக்கு எதிர்பார்த்தபடியே அல்லது அதை விட அதிகமாக இருக்கும் போது பங்கு விலை அதிகரிக்கும். ஆக இது வாங்க சரியான இடம் தான்.
இந்தியாவின் வாரன் பஃபெட்
வாரன் பஃபெட்டின் இந்த வரிகளுக்கு ஏற்ப தான் தற்போது இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜூன் ஜூன்வாலாவும் முதலீடுகளை சில பங்குகளில் கொரோனா நெருக்கடி காலத்திலும் செய்துள்ளார். அப்படி அவர் முதலீடு செய்த பங்குகள் என்ன? என்பதை தான் இந்த கட்டுரையில் பார்க்கபோகிறோம்.
இந்திய சந்தை நிலவரம்
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்திய சந்தையானது கிட்டதட்ட இருமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக நிஃப்டி கடந்த மார்ச் 31 அன்று 8,597 ஆக இருந்தது. இது மே 31, 2021, 15,301 ஆக அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட 78% ஏற்றம் கண்டுள்ளது. சென்செக்ஸ்-,ம் இந்த காலகட்டத்தில் நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது.
ராகேஷ் ஜூன் ஜூன்வாலாவின் கருத்து
இந்த விஷயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடந்த ஏப்ரல் 2020ல் சந்தையின் கீழ்மட்டத்தில் தான் முதலீடு செய்ய தொடங்கினேன். தற்போது உச்சத்தில் உள்ளது. நான் பார்மா, டெலிகாம், ஸ்டீல் பங்குகள் மற்றும் வங்கி பங்குகளில் முதலீடுகளை அதிகரித்தேன். சந்தையில் தற்போது நல்ல ஏற்றம் கண்டுள்ளது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் தற்போது ஒருவர் பங்குகளை வாங்கும்போது கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் முதலீட்டாளார்களை எச்சரித்துள்ளார்.
என்னென்ன பங்குகளில் முதலீடு
சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்தியர்கள் இந்தியாவை நம்பவில்லை. இந்தியாவினை நம்பினால் அவர்கள் வளமானவர்களாக இருப்பார்கள். நான் மருந்து பங்குகளில் முதலீடு செய்தேன். அதோடு டாடா ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீலில் முதலீடு செய்தாகதாகவும் கூறியுள்ளார். அதோடு சன் பார்மா ரிசர்ச் கம்பெனி, பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிலும் முதலீடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
Note: இந்த நிறுவனத்தில், முதலீடு செய்பவர்கள், இந்த நிறுவனத்தின் வளர்ச்சி/வீழ்ச்சிக்கான வாய்ப்புக்களையும், முதலீட்டிற்கான ஆபத்தையும் சொந்தமாக ஆராய்ந்து முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications